/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தேர்தல் ஆண்டில் பங்குச் சந்தை எப்படி இருக்கும்?
/
தேர்தல் ஆண்டில் பங்குச் சந்தை எப்படி இருக்கும்?
ADDED : ஜன 15, 2024 01:18 AM

இந்த ஆண்டு பொது தேர்தல் நடைபெறும் நிலையில், பங்குச் சந்தையின் போக்கும், செயல்பாடும் எப்படி இருக்கும் என ஒரு அலசல்!
பங்குச் சந்தை அண்மை காலத்தில் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், எதிர்வரும் காலத்திற்கான அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் எனும் சிந்தனை முதலீட்டாளர்களிடம் தீவிரமாகியுள்ளது.
சந்தையின் உச்ச நிலை லாபம் பார்ப்பதற்கான தருணமா? அல்லது சந்தையின் போக்கிற்கு ஏற்ப முதலீடு உத்தி எப்படி இருக்க வேண்டும் எனும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த பின்னணியில், இந்த ஆண்டு நாட்டில் பொது தேர்தல் நடைபெற இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் காலம் சந்தையின் போக்கில் தாக்கம் செலுத்தும் என சொல்லப்படும் நிலையில், எதிர்வரும் மாதங்களில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் எனும் கேள்வியும் முக்கியமாகிறது.
ஏற்ற இறக்கம்
பொதுவாக, நாட்டின் பொது தேர்தல் பங்குச் சந்தையில் பெரும் தாக்கம் செலுத்தும் என்பதால், தேர்தலின் போக்கு, சந்தையின் போக்கை தீர்மானிக்கும் அம்சங்களில் ஒன்றாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு, அமெரிக்காவிலும் அதிபர் தேர்தல் நடைபெற இருப்பது, கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவும் தாக்கத்தை அதிகமாக்கும்.
அண்மை காலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களின் முடிவுகளை ஆதாரமாகக் கொண்டால், வரும் பொது தேர்தலில் தற்போதைய அரசு தொடர்வதற்கான வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், தேர்தலும், பங்குச் சந்தையும் ஆச்சர்யமளிக்க வல்லவை எனும் கருத்தும் நிலவுகிறது.
அரசின் கொள்கைகளும், செயல்பாடும் சந்தையில் தாக்கம் செலுத்துவதால், தேர்தல் காலம் பங்குச் சந்தையின் போக்கை தீர்மானிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக தேர்தலுக்கு முந்தைய காலத்தில் பங்குச் சந்தை தீவிர ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது.
ஓட்டுப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் செயல்பாடு தீவிரமாகும் போது, சந்தையின் போக்கும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தொடர்பான அலசல்களும், திருப்பங்களும் ஏற்படுத்தும் நிச்சயமற்ற தன்மை இதற்கு காரணமாகிறது. எனினும், இந்த நிச்சயமற்ற தன்மை பொருளாதார காரணிகளுடனோ, தொழில் அம்சங்களுடனோ தொடர்புடையது அல்ல என்கின்றனர்.
என்ன பலன்?
தேர்தல் முடிவு நெருங்கும் காலத்தில் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பொதுவாக தேர்தலுக்கு முந்தைய ஆறு மாத காலத்தில் சந்தை நல்ல பலனை அளித்துள்ளதாகக் கருதப்படுகிறது. கடந்த கால தேர்தல்களை நோக்கும் போது, 1998ம் ஆண்டு மட்டுமே சந்தை எதிர்மறை பலன் அளித்துள்ளது.
அதே நேரத்தில் 2009ல் சந்தை கிட்டத்தட்ட 60 சதவீத பலன் அளித்தது. மேலும், தேர்தல் முடிந்த பிறகு சந்தை நிலைபெறும் போக்கையும் காணலாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில், முதலீட்டாளர்கள் தேர்தல் செய்திகளையும், போக்குகளையும் கவனித்து வர வேண்டும் என்றாலும், நீண்ட கால அடிப்படையிலான உத்தியை பின்பற்றுவதே சரியாக இருக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
புதிய அரசு அமைவது பொருளாதார நோக்கில் தாக்கம் செலுத்தும் என்றாலும், அதற்கேற்ப தேவை எனில் முதலீடு உத்தியில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்றாலும், முதலீட்டாளர்கள் அடிப்படையில் நல்ல பங்குகளை கொண்ட பரவலாக்கம் நிறைந்த முதலீட்டு தொகுப்பை பெற்றிருந்தால், நீண்ட கால அணுகுமுறையை தொடர வேண்டும் என்கின்றனர்.