/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
என்.பி.எஸ்., பணம் திரும்ப பெற புதிய விதிகள்
/
என்.பி.எஸ்., பணம் திரும்ப பெற புதிய விதிகள்
ADDED : அக் 16, 2024 11:24 PM

புதுடில்லி:தேசிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ், அதன் சந்தாதாரரான அரசு ஊழியரின் இறப்பு மற்றும் பணிசெய்ய இயலா ஊனம் ஏற்படும் சூழலில், அவரது பங்களிப்புத் தொகையை திருப்பி அளிப்பதற்கான புதிய விதிகளை, மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
1சந்தாதாரரான அரசு ஊழியரின் இறப்பு அல்லது பணி செய்ய இயலா ஊனம் ஏற்படும் சூழலில், அவரது குடும்பத்திற்கோ அல்லது அவருக்கோ, ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் சென்று சேரும். அரசு பங்களிப்பு மற்றும் அதில் சேர்ந்த பலன்கள் ஏதேனும் இருப்பின், அரசின் கணக்கில் சேர்க்கப்படும்
2அரசின் பங்களிப்பு மற்றும் கூடுதல் பலன் நீங்கலாக, சந்தாதாரர் தரப்பில் சேர்ந்த ஓய்வூதியத் தொகை, மொத்தமாக அவருக்கோ, அவரால் பி.எப்.ஆர்.டி.ஏ.,வில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கோ வழங்கப்படும்
3 2004 ஜனவரி 1ம் தேதிக்கு பின், பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கணக்கில் சேர்ந்த தொகை, அவரது இறப்பு அல்லது பணி செய்ய இயலா ஊனம் ஏற்படும் சூழலில், தற்காலிக பலன்கள் வழங்கப்படும். எனினும், இறுதி ஓய்வூதியத் தொகையில் இவை பிடித்தம் செய்து கொள்ளப்படும்
4 ஓய்வூதியதாரரின் இறப்பு அல்லது பணி செய்ய இயலா ஊனம் ஏற்படும் சூழலில், அவரது கணக்கில் சேர்ந்துள்ள ஊழியரின் பங்களிப்பு, வட்டி ஆகியவற்றை அவரது சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் அல்லது நியமனதாரர் பெறலாம்.
மேலும் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து, தொகை பெறப்படும் நாள் வரை, பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி வழங்கப்படும்
5 அரசு ஊழியரின் இறப்பு அல்லது பணிசெய்ய இயலா சூழலில், அவரது ஓய்வூதிய கணக்கில் இருந்த தொகையில் அரசு பங்களிப்பை, அதன் கணக்கில் வரவு வைக்காமல், ஊழியரின் நியமனதாரர் அல்லது வாரிசுகளுக்கு வழங்கியிருந்தால், அரசின் பங்கு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
செலுத்தப்பட காலதாமதம் ஏற்பட்டால், அப்போது அமலில் இருக்கக்கூடிய வட்டியை கணக்கிட்டு செலுத்த வேண்டும்.