/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஆர்.பி.ஐ., கூட்டத்தால் முன்னெச்சரிக்கை
/
ஆர்.பி.ஐ., கூட்டத்தால் முன்னெச்சரிக்கை
ADDED : பிப் 05, 2025 11:55 PM

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய சந்தை குறியீடுகள் இறக்கம் கண்டன. 23 வர்த்தக நாட்களுக்குப் பின், அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால், நேற்று துவக்கத்தில் சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கியது. ஆனால், வர்த்தகப் போர் குறித்த கவலை, ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டம் ஆகியவற்றை முன்னிட்டு, முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள், 1,683 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.84 சதவீதம் குறைந்து, 75.56 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 பைசா குறைந்து, வரலாறு காணாத வகையில் 87.43 ரூபாயாக இருந்தது.
ஐ.டி.சி., ஹோட்டல்ஸ் நீக்கம்
சென்செக்ஸ் உள்பட மும்பை பங்குச் சந்தையின் 22 குறியீடுகளில் இருந்து, ஐ.டி.சி., ஹோட்டல்ஸ் பங்குகள் நேற்று தற்காலிகமாக நீக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஐ.டி.சி., ஹோட்டல்ஸ் பங்குகள் குறைந்தபட்ச விலையை எட்டவில்லை. எனவே, அனைத்து பி.எஸ்.இ., குறியீடுகளில், அதன் வர்த்தகத்தை ஐ.டி.சி., நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக, 400 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகள் விற்பனை நடைபெற்றது.
ரூ.16,322 கோடி ஜி.எஸ்.டி., நோட்டீஸ்
ஸ்ரீநகரை தலைமையிடமாக கொண்ட தனியார் வங்கியான ஜம்மு அண்டு காஷ்மீர் வங்கிக்கு, 8,161 கோடி ரூபாய் பரிவர்த்தனை மற்றும் அதே மதிப்பிலான 8,161 கோடி ரூபாய் அபராதம் என மொத்தம் 16,322 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., தொகை செலுத்துமாறு,
ஜி.எஸ்.டி.,புலனாய்வு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இவ்வங்கியின் மொத்த சந்தை மதிப்பு 11,210 கோடி ரூபாயாக உள்ள நிலையில், ஜி.எஸ்.டி., நிலுவைத்தொகை அதன் மதிப்பை விட 1.5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜாக்ஸ் பங்கு விலை ரூ.629
புதிய பங்கு வெளியீடுக்கு வரும் அஜாக்ஸ் இன்ஜினியரிங் பங்கு ஒன்றின் விலை 629 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்ட கான்கிரீட் கலவை இயந்திரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், ஐ.பி.ஓ.,வாயிலாக 1,269 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளது. முதலீட்டாளர்கள் வசமுள்ள 2.01 கோடி பங்குகள் விற்பனைக்கு வரவுள்ளது. வரும் பிப்., 10 - 12 வரை முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.