
இறக்கத்திலிருந்து மீண்ட சந்தை
நேற்று இந்திய பங்கு சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் அதிக உயர்வுடன் நிறைவு செய்தன. மீண்டும் அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதம் ஆகிய காரணங்களால் வாரம் முழுதும் சந்தைபோக்கை கணிக்க முடியாமல், முதலீட்டாளர்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில், நாட்டின் உள்நாட்டு தேவை அதிகரிப்பு, ரெப்போ வட்டி குறைப்பு தொடர்பான நம்பிக்கை காரணமாக நேற்று நுகர்பொருட்கள், தனியார் வங்கி மற்றும் ஐ.டி.,துறை சார்ந்த பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். மேலும், ரிலையன்ஸ், எச்.டி.எப்.சி., மற்றும் ஐ.டி.சி., உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்கி குவித்தனர்.
இதனால், நேற்றைய வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 953 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர், 769 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. நிப்டி,சென்செக்ஸ் தலா 1 சதவீதம் உயர்வுடன் நிறைவடைந்தன. எனினும், வாராந்திர அடிப்படையில், சந்தை குறியீடுகள் சரிவுடன் நிறைவு செய்தன.
உலக சந்தைகள்
வியாழன்று அமெரிக்க சந்தைகள் பெரிய மாற்றமின்றி நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்சேங் குறியீடுகள் உயர்வுடனும், தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடனும் நிறைவு செய்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன.
உயர்வு கண்ட பங்குகள் -- நிப்டி
எட்டர்னல் 3.63%
எச்.டி.எப்.சி.,லைப் 3.28%
ஜியோ பைனான்ஸ் 2.49%
பவர்கிரிட் 2.46%
ஐ.டி.சி., 2.32%
உயர்வுக்கு காரணங்கள்
1 உள்நாட்டு தேவை அதிகரிப்பு, ரெப்போ குறைப்பு தொடர்பான நம்பிக்கை அதிகரிப்பு
2 முன்னணி நிறுவன பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டிய முதலீட்டாளர்கள்
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,795 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.23 சதவீதம் குறைந்து, 64.29 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா அதிகரித்து, 85.45 ரூபாயாக
இருந்தது.