தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/ஆயிரம் சந்தேகங்கள்/ஆயிரம் சந்தேகங்கள்: 'மகிளா சம்மான்' சேமிப்பு திட்டம் முடிவடைந்து விட்டதா?

ஆயிரம் சந்தேகங்கள்: 'மகிளா சம்மான்' சேமிப்பு திட்டம் முடிவடைந்து விட்டதா?

ஆயிரம் சந்தேகங்கள்: 'மகிளா சம்மான்' சேமிப்பு திட்டம் முடிவடைந்து விட்டதா?


ADDED : ஏப் 13, 2025 10:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 10:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாடுகளுக்கு இடையிலான கொடுக்கல், வாங்கல்களில் ஒரு நாடு கடனை திருப்பிக் கொடுக்காவிட்டால் என்னவாகும்? யாரிடம் முறையிடுவது?

ஜி.ராஜேந்திரன், வாட்ஸாப்

யாரிடமும் முறையிட முடியாது. கடன் கொடுத்த நாடுகள், கடனுக்கான விதிகளை சற்றே தளர்த்தி, திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் கொடுக்க வேண்டியிருக்கும். வட்டியை தள்ளுபடி செய்துவிட்டு, அசலை மட்டும் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொள்ள வேண்டும். கடந்த 2020ல் லெபனான் நாட்டுக்கு இப்படித்தான் ஆயிற்று.

உள்நாட்டில் ஊழல் மலிந்து, முறையற்ற செலவினங்கள் அதிகரித்ததால், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 58 சதவீதம் சரிந்தது.

பல்வேறு நிதி கட்டுப்பாடுகளை கொண்டு வருவதாக உறுதியளித்து, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மீண்டும் கடன் பெற்றது லெபனான். இன்னும் அந்த நாட்டினால் தலைநிமிர முடியவில்லை. மக்கள் ஏழ்மையில் தவிக்கின்றனர்.

என் சிபில் ரிப்போர்ட்டை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும், கார் லோன், ஹோம் லோன் போன்ற லோன்களுக்கு போகும் போது ஏதேனும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளவும், திருப்பூரில் அணுகுவதற்கு தொடர்பு எண்கள் இருந்தால் தரவும். இது பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் இருக்கிறேன். அதை விளக்குவதற்காக தகுந்த ஆட்கள் உள்ளனரா?



தினேஷ், திருப்பூர்



எனக்கு தெரிந்து இதற்கெல்லாம் முகவரோ, ஆலோசகரோ இருப்பது போல் தெரியவில்லை. நீங்களே படித்து தெரிந்துகொள்ள வேண்டியது தான்.

மேலும், இது ஒன்றும் கம்பசூத்திரமும் இல்லை; எளிமையான விஷயம் தான். நீங்கள் உங்களது வரவு - செலவுகளையும், கடன்களையும் முறையாக பராமரிக்கிறீர்களா என்பது தான் அடிப்படை. கிரெடிட் ஸ்கோரை உயர்த்திக்கொள்ள குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. வாங்கிய கடன்களை சீராக கட்டி வந்தாலே போதும்.

ஒரு தனியார் வங்கி மேலாளரின் வற்புறுத்தலின்படி, இரண்டு பாலிசிகள் எடுத்து ஆண்டு தோறும் 2 லட்சம் ரூபாய் பிரீமியம் கட்டுவதற்கு சம்மதித்து, முதல் தவணையாக 4 லட்சம் ரூபாய் பிரீமியம் கட்டினேன். தற்போது என் குடும்ப சூழ்நிலையால் தொடர்ந்து பிரீமியம் கட்ட இயலாமல் உள்ளதால், அதை விளக்கி, இதுவரை 15 இ - மெயில்களை காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பி இரண்டு பாலிசிகளையும் ரத்து செய்து, கட்டிய பிரீமிய தொகையை திருப்பித் தந்திட கேட்டுள்ளேன். என் விண்ணப்பம் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, என் பணம் திரும்ப கிடைக்குமா?

எஸ்.நடராஜன், வாட்ஸாப்

கிடைக்காது. நீங்கள் சம்மதித்து தான் இந்த காப்பீட்டு பாலிசிகளை வாங்கியுள்ளீர்கள். 'மிஸ் செல்லிங்' என்று சொல்வதற்கு இதில் இடமில்லை.

'மகிளா சம்மான்' சேமிப்பு பத்திர திட்டம் முடிவடைந்துவிட்டதா? வங்கியில் கேட்டால், இந்த திட்டம் இல்லை என்கின்றனரே?

சாந்தி ஜெயகுமார், காட்பாடி

ஆம். கடந்த மார்ச் 31 உடன் இந்த திட்டம் முடிவடைந்துவிட்டது. பெண்கள் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த திட்டம், இரண்டு ஆண்டுகள் வரை தான் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இன்றைக்கு ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ள நிலையில், சாதாரண வங்கி வைப்பு நிதி திட்டங்களின் வட்டியும் குறைய ஆரம்பித்துவிட்டன. பல்வேறு சிறப்பு திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பெண்களின் எதிர்காலத்துக்கு சேமிப்பு அவசியம் என்பதால், இந்த திட்டத்தை மேலும் நீட்டித்திருக்கலாம் அல்லது வேறு பெயரில் மீண்டும் அறிமுகம் செய்யலாம்.

தங்க நகைகளை அடகு வைத்து, அவசர காலத்திற்கு பணம் திரட்டுவதை போல், டிஜிட்டல் கோல்டு முதலீட்டை அடகு வைத்து பணம் பெற முடியுமா?

செ.செல்வக்கோ பெருமாள்

காஞ்சிபுரம்

டிஜிட்டல் கோல்டு மீதான கடன் இருக்கட்டும்; முதலில், வழக்கமான நகைக்கடன் வாங்குவதே சிரமமாகிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய பணக்கொள்கை குழுவின் சந்திப்புக்கு பின், ஆர்.பி.ஐ., கவர்னர், 'நகைக்கடன்கள் தொடர்பாக புதிய விதிமுறைகள் மக்கள் பரிசீலனைக்காகவும், ஆலோசனைக்காகவும் வெளியிடப்படும்' என்றார்.

வெளியான அந்த விதிமுறைகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. அவசர பணத்தேவைக்கு இன்றைக்கு ஏழை, எளியோரின் ஒரே புகலிடமாக இருப்பவை ஆபரணங்கள் தான். எந்த வங்கியில் போய் கொடுத்தாலும், வேறு கேள்வியே இல்லாமல், நகையை மட்டுமே அடமானமாக வைத்துக்கொண்டு கடன் கொடுக்கின்றனர்.

நகைக்கடன் வழங்கும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், இதர நிதி அமைப்புகளை ஒழுங்குபடுத்த வேண்டியது ஆர்.பி.ஐ.,யின் கடமை. அங்கே வாராக்கடனோ, வேறு மோசடிகளோ ஏற்பட்டுவிடாத வண்ணம் முறைப்படுத்துவதும் அவசியம் தான்.

அதற்காக, வாடிக்கையாளர்கள் மீது பல்வேறு விதிமுறைகளை சுமத்துவது ஏற்புடையது அல்ல.

கடந்த மார்ச் மாதம் 28ம் தேதியன்று எனக்கு 60 வயது ஆனது. கடந்த நிதியாண்டுக்கான வருமான வரியை, நான் மூத்த குடிமகனாகக் கருதி ரிட்டர்ன் தாக்கல் செய்யலாமா? வரும் நிதியாண்டில் ஓய்வூதியமாக 9 லட்சம் ரூபாயும்; வைப்பு நிதி, முதலீடு, ஈவுத்தொகை உட்பட மேலும் 4.50 லட்சம் ரூபாயும் வரும். அப்போது எப்படி வரி கட்ட வேண்டும்?

எஸ்.கே.சம்பத் நாராயணன்

மின்னஞ்சல்



வருமான வரி சட்டப்படி, கடந்த ஆண்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட, 80 வயதுக்கு குறைவானவர்கள் மூத்த குடிமக்கள் என கருதப்படுகின்றனர். அதனால், நீங்கள் மூத்த குடிமகனாகக் கருதியே ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்.

அடுத்த ஆண்டு நீங்கள் வரி கட்டும்போது, 9 லட்சத்தோடு 4.5 லட்சத்தையும் சேர்த்து, 13.5 லட்சம் ரூபாய்க்கு வரி கட்ட வேண்டும். புதிய வரி திட்டத்தின்படி தோராயமாக 74,000 ரூபாய் வரை வரி கட்ட வேண்டியிருக்கும்.

இதே வருவாய்க்கு, பழைய வரி திட்டத்தில் 2.08 லட்சம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். இது தோராயமான கணக்கு தான். நல்ல ஆடிட்டரை கலந்தாலோசியுங்கள். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us