தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/ஆயிரம் சந்தேகங்கள்/ஆயிரம் சந்தேகங்கள்: வெள்ளியில் முதலீடு செய்வது எப்படி?

ஆயிரம் சந்தேகங்கள்: வெள்ளியில் முதலீடு செய்வது எப்படி?

ஆயிரம் சந்தேகங்கள்: வெள்ளியில் முதலீடு செய்வது எப்படி?


ADDED : நவ 25, 2024 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெரிந்தவர் ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தேன். பணம் வாங்கும் போது என்னிடம் கையெழுத்திடாத, தேதி குறிப்பிடாத இரண்டு காசோலைகளை வாங்கிக் கொண்டார். பணத்தை முழுமையாக செலுத்தியபின், காசோலையை அவர் தரவில்லை என்றால் என்ன செய்வது?


ஜெ.மணவாளன்,

திருவனந்தபுரம், கேரளா.

நீங்கள்தானே அந்த காசோலையைக் கொடுத்தீர்கள். உங்களுக்குத் தான் அந்த காசோலைகளின் எண்கள் தெரியுமே? 'ஸ்டாப் பேமென்ட்' கொடுக்கலாமே? ஒன்று, வங்கி கிளைக்குப் போய், உரிய படிவத்தில், பணம் வழங்க வேண்டாம் என்று எழுதிக் கொடுங்கள்.

அல்லது வங்கிச் சேவையை இணையம் வாயிலாக பயன்படுத்துபவர் என்றால், இணைய சேவை வழியாகவும், எளிதாக ஸ்டாப் பேமென்ட் கொடுக்கலாம். இதற்கு ஒரு சிறு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், அவ்வளவுதான். பயப்படத் தேவையில்லை.

நானும் என் கணவரும் சேர்ந்து, ஒரு வங்கியில் லாக்கர் வசதி பெற்றுள்ளோம். எனக்கு ஏதேனும் ஒன்று ஆகுமானால், பின்னர், என் கணவர் லாக்கரைப் பயன்படுத்த முடியுமா?


ஜெயப்ரியா, கோவை.

இருவரில் ஒருவர் மறைந்துவிட்டாலே, மற்றொருவருக்கு லாக்கரைப் பயன்படுத்தும் உரிமை தன்னிச்சையாகப் போய்ச் சேராது. முன்னதாகவே நாமினேஷன், சர்வைவர்ஷிப் விதிகளின் படி, எழுதிக் கொடுத்திருக்க வேண்டும்.

அதாவது, ஒருவர் இல்லையெனில், இன்னொருவர் பயன்படுத்துவதற்கு ஏற்ப, மற்றவருக்கு லாக்கரைப் பயன்படுத்தும் அனுமதியை எழுதிக் கொடுத்திருக்க வேண்டும்.

வங்கிக் கணக்கில் பணமில்லை என்றால், மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி.,க்கு பணம் செலுத்துவது என்ன ஆகும்? கிரிசில் ரேட்டிங் பாதிக்கப்படுமா?


மு.தாமரைச்செல்வன்,

செங்கல்பட்டு.

இரண்டு கோணத்தில் இதற்கான பாதிப்புகள் இருக்கும். மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், நீங்கள் எஸ்.ஐ.பி., பணம் கட்டவில்லை எனில், மூன்று மாதங்கள் வரை அபராதம் ஏதும் விதிக்காது.

அதன் பின்னரும் நீங்கள் கட்டவில்லை என்றால், ஒருவேளை உங்கள் எஸ்.ஐ.பி.,யை ரத்து செய்வதற்கான வாய்ப்பு உண்டு. இது நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும். அவர்களுடைய ஆவணங்களிலேயே இத்தகைய விபரங்களை முன்னதாகவே தெரிவித்திருப்பார்கள், பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்னொரு விஷயம், எஸ்.ஐ.பி., பணம் கட்டுவதற்கு நீங்கள் வங்கியில் 'ஆட்டோ டெபிட்' செய்துகொள்வதற்கு ஏற்ப, இ.சி.எஸ்., எனும், 'எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ்' கொடுத்திருப்பீர்கள்.

உங்கள் வங்கிக் கணக்கில், இந்த ஆட்டோ டெபிட் செய்வதற்கு குறைந்தபட்ச தொகை இல்லையெனில், அதற்கு 100 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதற்கு மேல் ஜி.எஸ்.டி., 18 சதவீதமும் உண்டு.

கிரிசல் ரேட்டிங் எப்படி பாதிப்பு அடையும் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், இ.சி.எஸ். கொடுத்தால், அதை தலையே போனாலும் மதியுங்கள். இல்லையெனில், அபராதம் கட்டியே நொந்துபோவீர்கள்.

வெள்ளியில் முதலீடு செய்வது எப்படி? வெள்ளியை வாங்கி வைத்தால், அதை மீண்டும் பணமாக்க முடியுமா?


டி.அனுசூயா, மின்னஞ்சல்.

தேவையிருந்தால் மட்டுமே வெள்ளிப் பொருட்களாக வாங்கி வையுங்கள். இதற்கு ஜி.எஸ்.டி., உள்ளிட்ட கூடுதல் செலவுகள் உண்டு என்பது ஞாபகம் இருக்கட்டும். மற்றபடி அதை முதலீடாக கருதுவதாக இருந்தால், வெள்ளி இ.டி.எப்., வாங்குங்கள்.

அக்டோபர் 31 உடன் முடிந்த கடந்த ஓராண்டில், வெள்ளி இ.டி.எப்.,கள் கிட்டத்தட்ட 32.49 சதவீதம் வருவாய் கொடுத்திருக்கிறது.

எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியில் வெள்ளி ஏராளமாகத் தேவைப்படுவதால், பல நாடுகள் வெள்ளியை வாங்குகின்றன. இதனாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைவதாலும், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது.

பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்திருக்கிறதே? என்னென்ன பங்குகளை இந்தச் சமயத்தில் வாங்கலாம்? தங்கள் ஆலோசனை தேவை.


ஜி.சந்தோஷ், மின்னஞ்சல்.

நான் 'செபி'யில் பதிவு செய்துகொண்ட பங்குச் சந்தை ஆலோசகர் அல்ல. அதனால், குறிப்பிட்ட எந்தப் பங்கு பெயரையும் சொல்வதற்கு எனக்கு அனுமதி கிடையாது. முதலில், இந்தச் சரிவு இன்னும் தொடரக்கூடும் என்பது தான் என் அனுமானம்.

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்யத் துவங்கும் வரை, நம் பங்குச் சந்தையில் நம்பிக்கை வர வாய்ப்பில்லை.

ஜனவரி 20ல், டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர், என்னென்ன அதிரடி அறிவிப்புகளைச் செய்யப் போகிறாரோ என்ற கவலையும் முதலீட்டாளர்களிடம் இருக்கிறது.

பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் வந்துவிடும். இவையெல்லாம் முடிந்த பிறகு தான் பங்குச் சந்தை கொஞ்சம் நிதானம் பெறும்.

முதலீடு செய்வதற்கு முன்பு 'பிரைஸ் டு எர்னிங்ஸ்' என்று சொல்லப்படும் பி.இ. ரேஷியோ, 'பிரைஸ் டு புக்' என்று சொல்லப்படும் பி/பி மதிப்பு ஆகியவற்றைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதைப் பற்றி மேலதிகம் படித்துக்கொண்டு, அதன் பின்னர் உங்கள் தேர்வை ஒட்டி முதலீடு செய்யுங்கள்.

மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையிலான காப்பீடு திட்டம் ஏதும் உண்டா?


செ.செல்வக்கோ பெருமாள்,

காஞ்சிபுரம்.

பொதுவாகவே இப்போது ஒரு வசதி இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், மருத்துவ காப்பீடைப் புதுப்பித்துக்கொள்வோம். ஆனால், மூன்று ஆண்டு அல்லது ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகக்கூடிய 'மல்டி இயர் பாலிசி'கள் உள்ளன.

இதில் ஒருசில சவுகரியங்களும், வேறு சில இடர்களும் உள்ளன. இன்றைய மருத்துவ பணவீக்கம் நம் நாட்டில் கிட்டத்தட்ட 14 சதவீதம் அளவுக்கு இருப்பதால், ஒவ்வோர் ஆண்டும், பாலிசிக்கான பிரீமியம் தொகை உயர்ந்து வருகிறது.

இந்த மல்டி இயர் பாலிசிகளை எடுத்தால், இதன் பிரீமியம் தொகையை நிலை நிறுத்திவிடலாம். ஒவ்வோரு ஆண்டும், பிரீமியம் தொகை உயராது. ஒருசில நிறுவனங்கள், மல்டி இயர் பாலிசி வாங்கினால், 17, 18 சதவீத கழிவும் தருகிறார்கள். இதன் மறுபக்கம் கொஞ்சம் சிரமமானது.

மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கான பிரீமியம் தொகையை முன்னதாகவே செலுத்த வேண்டும். அதுநிச்சயம் பெரிய தொகையாக இருக்கும்.

பிரீமியம் தொகையைச் செலுத்த ஒருசில நிறுவனங்கள் இ.எம்.ஐ., வசதியையும் தருகின்றன. இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us