27 சதவீதம் தள்ளுபடியில் பட்டியலானது குவாலிட்டி வால்ஸ்
27 சதவீதம் தள்ளுபடியில் பட்டியலானது குவாலிட்டி வால்ஸ்
ADDED : பிப் 17, 2026 12:12 AM

'ஹி ந்துஸ்தான் யுனிலீவர்' நிறுவனத்தில் இருந்து, அதன் ஐஸ்கிரீம் வணிகமான 'குவாலிட்டி வால்ஸ்', தனி நிறுவனமாக, நேற்று முதல் சந்தையில் பட்டியலானது. தேசிய பங்கு சந்தையில் பங்கு ஒன்றின் விலை 40.20 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 25.87 சதவீத தள்ளுபடியுடன் 29.80 ரூபாயாகவும், மும்பை பங்கு சந்தையில் பங்கு ஒன்றின் விலை 38.15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 22 சதவீத தள்ளுபடியுடன், பங்கு விலை 29.90 ரூபாயாகவும் நேற்று வர்த்தகத்தை ஆரம்பித்தன.
வர்த்தக நேரத்தின் போது என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., முறையே, தலா 5 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டன.
இதற்கிடையே, 'தி மேக்னம் ஐஸ்கிரீம் கம்பெனி', 26 சதவீத பங்குகளை ஓபன் ஆபர் முறையில், நேற்றைய ஆரம்ப விலையில் இருந்து, கிட்டத்தட்ட 28 சதவீத தள்ளுபடியில், அதாவது பங்கு ஒன்று 21.33 ரூபாய்க்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக, குவாலிட்டி வால்ஸ் சந்தையில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வர்த்தக நேர முடிவில், இந்நிறுவன பங்குகள், என்.எஸ்.இ.,யில் மேலும் 2 சதவீதம் குறைந்து, 29.20 ரூபாய் ஆகவும், பி.எஸ்.இ.,யில் 1.30 சதவீதம் குறைந்து, 29.50 ரூபாய் ஆகவும் நிலைபெற்றன.
கடந்த 2024 நவம்பரில் ஐஸ்கிரீம் வணிகத்தை தனியாகப் பிரிக்க ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஒப்புதல் அளித்தது. இந்நிறுவனத்தின் மொத்த ஆண்டு வருவாயில் ஐஸ்கிரீம் வணிகத்தின் பங்களிப்பு 3 சதவீதம் மட்டுமே. அதாவது 1,800 கோடி ரூபாயாக உள்ளது. ஹெச்.யு.எல்., பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்களுக்கு தலா 1:1 என்ற விகிதத்தில் குவாலிட்டி வால்ஸ் பங்குகள் அளிக்கப்பட்டிருந்தன.

