எப் அண்டு ஓ., வர்த்தகத்தில் 'ப்ரீ -ஓப்பனிங்' அறிமுகமாகிறது டிசம்பர் 8ம் தேதியிலிருந்து அறிமுகம் ஆகிறது
எப் அண்டு ஓ., வர்த்தகத்தில் 'ப்ரீ -ஓப்பனிங்' அறிமுகமாகிறது டிசம்பர் 8ம் தேதியிலிருந்து அறிமுகம் ஆகிறது
ADDED : நவ 05, 2025 10:47 PM

சாதாரண பங்கு வர்த்தகத்தில் உள்ள நடைமுறையான, 'ப்ரீ ஓப்பனிங்' அடுத்து எப் அண்டு ஓ., வர்த்தகத்திலும் வர உள்ளது. சந்தை ஆரம்பமாவதற்கு முன், சரியான விலையை கண்டுபிடிக்க, இந்த ப்ரீ -ஓப்பனிங் முறை ஒரு அறிவியல்பூர்வமான தீர்வாக கருதப்படுகிறது. பங்கு வர்த்தகத்தில் இருக்கும் இந்த நடைமுறை, டிசம்பர் 8ம் தேதியிலிருந்து, எப் அண்டு ஓ., சந்தையிலும் அறிமுகமாகிறது.
ப்ரீ - ஓப்பனிங் வர்த்தகம்
சந்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக நடக்கும் சிறப்பு வர்த்தக நேரமே ப்ரீ ஓப்பனிங் வர்த்தகம். நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கை,- அரசின் கொள்கை மாற்றங்கள்,- உலக சந்தை மாற்றங்கள், -முக்கிய நிகழ்வுகள் என இரவு முழுதும் பல செய்திகள் வரும். இந்த செய்திகளின் தாக்கத்தால் அன்றைய சரியான ஆரம்ப விலை என்னவாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
இந்நிலையில், இனி வர்த்தகர்கள், நாளின் ஆரம்பவிலையை சரியான அடிப்படையில் கண்டுபிடிக்க, இந்த நடைமுறை உதவியாக இருக்கும்.
கால அட்டவணை
காலை 9:00 - 9:08 மணி வரை (8 நிமிடங்கள்): இது ஏல நடைமுறையில் நடக்கும் ப்ரீ ஓப்பனிங் சந்தையில் ஆர்டர் போடும் நேரம்.- இந்த கால அவகாசத்தில், வர்த்தகர்கள் தங்கள் ஆர்டர்களை உள்ளீடு செய்யலாம். அதாவது,- வாங்க/விற்பதற்கான விலை மற்றும் எண்ணிக்கையை குறிப்பிடலாம்.
காலை 9:08 - 9:12 மணி வரை (4 நிமிடங்கள்): ஆர்டர் மேட்சிங் செய்தல்.- எந்த விலையில் அதிக வர்த்தகம் நடக்கும் என்று கணக்கிடப்படும்.- ஆர்டர்கள் மேட்சிங் செய்யப்பட்டு, டிரேடாக மாறும். பின் டிரேட் கன்பர்மேஷன் வர்த்தகர்களுக்கு அனுப்பப்படும்.
காலை 9:12 -- 9:15 மணி வரை (3 நிமிடங்கள்): மாற்றத்துக்கான காலம்.- ப்ரீ - ஓப்பனிங்கிலிருந்து சாதாரண சந்தைக்கு மாற்றப்படும். பூர்த்தியாகாத ஆர்டர்கள், தானாக சாதாரண சந்தைக்கு மாற்றப்பட்டு விடும். இந்த நேரத்தில் நிலுவையில் இருக்கும் ஆர்டர்களை மாற்றவோ கேன்சல் செய்யவோ முடியாது!
காலை 9:15 மணி முதல்: தொடர்ச்சியான சந்தை நடைமுறையில், சாதாரண வர்த்தகம் (Continuous Market) ஆரம்பித்துவிடும்.
யாருக்கு என்ன பயன்?
நிறுவன வர்த்தகர்களுக்கு பெரிய அளவில் ஆர்டர் போடும்போது, திடீர் அல்லது எதிர்பாராத விலை மாற்றம் இல்லாமல் வர்த்தகம் செய்யலாம்
சிறு முதலீட்டாளர்களுக்கு நியாயமான ஆரம்ப விலையில் வர்த்தகம் செய்ய முடியும்
ஒரு சிலர் விலையை வேண்டுமென்றோ, அறியாமலோ திடீரென மாற்றுவதை தடுக்கலாம்
தின வர்த்தகர்களுக்கு அன்றைய சரியான ஆரம்ப விலை தெரிந்து, வர்த்தகம் செய்யலாம்
சந்தையின் உண்மையான உணர்வை அறியலாம்.
எவற்றுக்கு பொருந்தும்?
தேசிய பங்கு சந்தையில், எப் அண்டு ஓ., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடப்பு மாத பியூச்சர்ஸ் (பங்குகள் மற்றும் குறியீடுகள்), நடப்பு மாத ஒப்பந்தங்கள் நிறைவடைவதற்கு ஐந்து வர்த்தக தினங்களுக்கு முன்னால், அடுத்த மாத ஒப்பந்தங்களுக்கு இந்த நடைமுறையானது ஆரம்பிக்கப்படும்.
கவனிக்க வேண்டியவை
மார்க்கெட் ஆர்டர்களுக்கு, மார்க்கெட் விலை பாதுகாப்பு (Market Price Protection) கிடையாது.
லிமிட் ஆர்டர்களுக்கு, மாற்றியமைக்கப்பட்ட, வரம்பு விலை ஆர்டர் பாதுகாப்பு மட்டுமே கிடைக்கும். (Limit Price Protection)
பூர்த்தியாகாத ஆர்டர்கள், தானாக சாதாரண சந்தைக்கு மாற்றப்படும் தருணத்தின் போது, நிலுவையில் இருக்கும் ஆர்டர்களை மாற்றவோ, கேன்சல் செய்யவோ முடியாது
நன்மைகள்
சந்தைக்கு
டிமாண்ட்- சப்ளையை கணக்கில் கொண்டு, நியாயமான விலையை அறிதல்
அதிக வெளிப்படைத்தன்மை
நியாயமான விலையை அறிதல்
வர்த்தகர்களுக்கு
சரியான ஆரம்ப விலை
செய்திகள், நிகழ்வுகள் தாக்கம் முழுமையாக பிரதிபலிக்கும்
ஆரம்பத்தில் நடக்கும் தாறுமாறான விலை மாற்றங்கள் வெகுவாக குறையும்.
வர்த்தகர்கள் கவனத்துக்கு
இது வர்த்தகர்களுக்கு நன்மை தரக்கூடிய ஒரு மாற்றம் என்றாலும், இதற்கான நடைமுறையை முதலில் புரிந்து கொண்டு அதன் வர்த்தகத்தில் ஈடுபடுவது நல் லது.

