ஜீரோ பேலன்ஸ்: நிம்மதியான ஓய்வு காலத்துக்கு என்.பி.எஸ்.,
ஜீரோ பேலன்ஸ்: நிம்மதியான ஓய்வு காலத்துக்கு என்.பி.எஸ்.,
UPDATED : பிப் 09, 2026 02:24 AM
ADDED : பிப் 09, 2026 02:23 AM

ஓய்வு காலத்துக்கு தேவையான நிதி ஆதாரத்தை எப்படி உருவாக்குவது என்பதை பார்த்து வருகிறோம். முன்னதாக, இ.பி.எஸ்., மற்றும் இ.பி.எப்., பற்றி பார்த்தோம். அடுத்தது தேசிய பென்ஷன் திட்டம்.
கடந்த 2004ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் இன்று பலரது விருப்பமான தேர்வாக இருக்கிறது. வருங்கால வைப்பு நிதி தரும் பாதுகாப்பையும், பங்குச் சந்தை தரும் அபரிமிதமான வளர்ச்சியையும் ஒரே இடத்தில் தரும் ஒரு தனித்துவமான திட்டம் இது.
இது, ஒரு சந்தை சார்ந்த ஓய்வு கால திட்டம். இ.பி.எப்., போல நிலையான வட்டி விகிதம் இல்லாமல், நாம் முதலீடு செய்யும் பணம் பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால், நீண்ட காலத்தில் மற்ற திட்டங்களை விட அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
திட்டத்தின் அமைப்பு
என்.பி.எஸ்.,சில் இரண்டு வகை கணக்குகள் உள்ளன. டையர்- - 1 என்பது தான் முதன்மையான ஓய்வு கால கணக்கு. இதில் நீங்கள் போடும் பணத்தை, 60 வயது வரை எடுக்க முடியாது; சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பகுதியளவு எடுக்கலாம். இது தான் உங்களின் ஓய்வு கால நிதி.
டையர் - -2 என்பது ஒரு சேமிப்பு கணக்கு போன்றது. இதில், எப்போது வேண்டுமானாலும் பணத்தை போடலாம்; எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால், இதற்கு வரிச் சலுகைகள் கிடையாது.
என்.பி.எஸ்.,சில் முதலீடு செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
பணம் எங்கே வளர்கிறது?
உங்கள் வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப, உங்கள் பணம் எதில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதை நீங்களே தீர்மானம் செய்யலாம். 35 வயதுக்கு கீழே உள்ளவர்கள் தைரியமாக ரிஸ்க் எடுக்கலாம்.
எனவே, பணத்தை 100 சதவீதம் வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். நீண்ட காலத்தில் இது ஆண்டொன்றுக்கு 12 சதவீதம் வரை லாபம் தரக்கூடும்.
மேலும், 35 முதல் 45 வயதுடையவர்கள், 85 சதவீதத்தை பங்குச் சந்தையிலும், 15 சதவீதத்தை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வது, சமச்சீரான வளர்ச்சியை தரும். 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஓய்வு காலம் நெருங்குவதால், பங்குச் சந்தை அபாயத்தை தவிர்க்க, 100 சதவீத தொகையை கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.
என்.பி.எஸ்.,சின் மேஜிக்
பல்கி பெருகுவது தான் என்.பி.எஸ்.,சில் உள்ள முக்கியமான மேஜிக். அதுவும் சின்ன வயதிலேயே இந்த திட்டத்தில் சேர்ந்து, தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், இத்திட்டம் ஈட்டித் தரும் லாபம் அளப்பரியது.
உதாரணத்தை பார்ப்போம். 30 வயதான ஒருவர் மாதந்தோறும் 1,000 ரூபாய் மட்டும் என்.பி.எஸ்.,சில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர், 100 சதவீதம் பங்குச் சந்தை முதலீட்டை தேர்வு செய்கிறார். ஆண்டுக்கு சராசரியாக 12 சதவீதம் லாபம் கிடைப்பதாக கொண்டால்:
35 வயதில்: அவர் கட்டிய பணம் 60,000. ஆனால், கையில் இருப்பது 92,000 ரூபாய்.
45 வயதில்: அவர் கட்டிய பணம் 1.8 லட்சம். ஆனால், அதன் மதிப்பு 4.85 லட்சம் ரூபாய்.
60 வயதில்: அவர் மொத்தம் கட்டியதோ 3.6 லட்சம் ரூபாய் மட் டுமே. ஆனால், அவருக்கு கிடைக்கும் மொத்த தொகை 39.85 லட்சம் ரூபாய்.
அதாவது, மாதந்தோறும் முதலீடு செய்யும் வெறும் 1,000 ரூபாய், 30 ஆண்டுகளில் ஈட்டித் தரும் வருவாய் இது. உங்களால் மாதந்தோறும் 10,000 ரூபாய் போட முடியும் என்றால், அது எவ்வளவு துாரம் பல்கிப் பெருகும் என்று கணக்கு போட்டு பாருங்கள்.
வயதும், டிசிப்ளினும் உங்கள் பக்கம் இருந்தால் போதும்... கண்ணெதிரே பெரிய கோடீஸ்வரன் ஆகலாம்.
நன்மைகள்
மியூச்சுவல் பண்டுகளை விட என்.பி.எஸ்., நிர்வாகக் கட்டணம் மிகவும் குறைவு. அதாவது, உங்கள் முதலீட்டில் 0.01 முதல் 0.25 சதவீதம் தான். உங்கள் வயதுக்கு ஏற்ப ஈக்விட்டி மற்றும் கடன் பத்திரங்களுக்கு இடையே முதலீட்டை மாற்றிக் கொள்ளலாம்.
குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது மருத்துவச் செலவுகளுக்காக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்ளலாம். இதுவரை, மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அவர்கள் சம்பளத்தில் 14 சதவீதம் வரை அரசு செலுத்தும் பங்குக்கு வரிச்சலுகை இருந்தது. தனியார் ஊழியர்களுக்கு இது 10 சதவீதமாக மட்டுமே இருந்தது.
சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பின்படி, இனி தனியார் நிறுவன ஊழியர்களும், தங்கள் நிறுவனம் செலுத்தும் 14 சதவீதம் வரையிலான தொகைக்கு வரி விலக்கு பெறலாம். இது, புதிய வரி முறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். முன்பு இருந்த மிகப்பெரிய குறை, 60 வயதில் கிடைக்கும் முதிர்வு தொகையில் 60 சதவீத பணத்தை மொத்தமாக மட்டுமே எடுக்க முடியும் என்பது தான். இனி 60 வயதில் அந்த 60 சதவீத தொகையை மொத்தமாக எடுக்க வேண்டிய அவசியமில்லை.
'சிஸ்டமேட்டிக் லம்ப் சம் வித்ட்ராயல்' (SLW) என்ற புதிய வசதி மூலம், மாதம், காலாண்டு அல்லது ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். 75 வயது வரை பணத்தை என்.பி.எஸ். சேமிப்பிலேயே வைத்துக்கொள்ளலாம். உள்ளே இருக்கும் பணத்துக்கு தொடர்ந்து வட்டி கிடைத்துக்கொண்டே இருக்கும். அதே சமயம், பென்ஷன் போல மாதம் ஒரு தொகையும் கிடைக்கும். இந்தத் தொகைக்கு வரி கி டையாது என்பது கூடுதல் சிறப்பு.
யாருக்கு ஏற்றது?
40 வயதுக்குக் கீழுள்ளவர்கள், அதிக ஈக்விட்டி முறையைத் தேர்வு செய்து, நீண்ட காலத்துக்கு பணத்தைப் பெருக்கலாம். 40 முதல் 55 வயதினருக்கு கொஞ்சம் பாதுகாப்போடு கூடிய வளர்ச்சி தேவை. எனவே 50--85 சதவீத ஈக்விட்டி முதலீடு போதுமானது. 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதுவரை சேர்த்த பணத்தைப் பாதுகாக்க வேண்டும். எனவே, கடன் பத்திரங்கள் சார்ந்த திட்டங்களுக்கு மாறுவது நல்லது.
என்.பி.எஸ்., வாத்சல்யா
இது பெற்றோருக்கு மகிழ்ச்சியான செய்தி. இதுவரை 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே என்.பி.எஸ்., கணக்கு துவங்க முடியும் என்று இருந்தது.இனி மைனர் குழந்தைகள் பெயரிலும் என்.பி.எஸ்., கணக்கை பெற்றோர் ஆரம்பிக்கலாம். இதற்கு 'என்.பி.எஸ்., வாத்சல்யா' என்று பெயர். இந்தக் கணக்கில் பெற்றோர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
குழந்தைக்கு 18 வயது பூர்த்தியானதும், இந்தக் கணக்கு தானாகவே வழக்கமான என்.பி.எஸ்., கணக்காக மாறிவிடும். நீங்கள் குழந்தை பிறந்தவுடனே இந்தத் திட்டத்தில் சேருகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் குழந்தைக்கு 60 வயது ஆகும் போது தான் இந்தப் பணத்தை எடுக்க முடியும். அதாவது, 60 நீண்ட ஆண்டுகள், பணம் பல்கிப் பெருகிக்கொண்டே இருக்கும். கோடி அல்ல... உங்கள் மகனுக்கோ, மகளுக்கோ, கோடி கோடியாகச் சேர்த்து வைக்க முடியும்!
![]() |


