பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தடியடி
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தடியடி
ADDED : செப் 16, 2011 11:27 PM
திருவனந்தபுரம்: பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர், அரசு வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தினர்.
தலைமை தபால் அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். ஆர்பாட்டக்காரர்களை போலீசார், தண்ணீர் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர்.
நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், பெட்ரோல் விலை திடீரென உயர்த்தப்பட்டதைத் கண்டித்து, கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று காலை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், தலைமை தபால் நிலையம் நோக்கி பேரணி நடத்தினர். அவர்கள் தலைமை தபால் நிலைய வளாகத்திற்குள் கோஷமிட்டபடியே சென்று, அங்கிருந்த கண்ணாடி ஜன்னல் உட்பட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும், பி.எம்.ஜி.சந்திப்பு அருகே, அரசு பொது மருத்துவமனை முன் நிறுத்தப்பட்டிருந்த அரசு வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில், வாகனத்தின் பெரும்பகுதி எரிந்து சேதமடைந்தது. இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய பேரணி, தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டது. அவர்கள் தலைமை செயலகம் அருகே, கண்டன கோஷங்களை எழுப்பி கலைந்து சென்றனர். தொடர்ந்து, பல்கலைக் கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்து கலாட்டாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் விரட்டினர். தடியடியில், சிலருக்கு காயமேற்பட்டது. அதே போல், ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசி நடத்திய தாக்குதலில், போலீசாருக்கும் காயமேற்பட்டது. காயமடைந்தோர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.