ADDED : செப் 03, 2011 10:45 PM
கொச்சி:துவக்கப்பட்ட முதல் நாளே, ஏர்-இந்தியாவின், கொச்சி-அகட்டி விமான சேவை, மோசமான வானிலை காரணமாக, ரத்து செய்யப்பட்டது.
இதனால், அவ்விமானத்தில் செல்லவிருந்த, 19 பயணிகள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து, கொச்சி வழியாக லட்சத்தீவுகளின் தலைநகரான அகட்டித் தீவிற்கு, ஏர்-இந்தியா விமான நிறுவனம், இம்மாதம் 1ம் தேதியிலிருந்து, விமான சேவை துவங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்றைய தினம் துவங்கப்பட்ட முதல் விமான சேவை, கொச்சி வரை மட்டுமே நடந்தது.கொச்சியில் இருந்து, அகட்டிக்கு செல்ல முடியாதபடி, அங்கு மோசமான வானிலை இருந்தது. இதனால், விமானம் கொச்சியில் இருந்து, மீண்டும் அதே பயணிகளுடன், கோழிக்கோட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. பயணிகள் அனைவரும் கோழிக்கோட்டில், ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் விமான சேவையை துவக்கிய ஏர்-இந்தியாவால், கொச்சி வரை மட்டுமே விமானத்தை இயக்க முடிந்தது.
அகட்டியில் நிலவி வரும் மோசமான வானிலையே இதற்கு காரணம். இந்நிலையில், அப்பயணிகள் மீண்டும் கோழிக்கோட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டனர். விமானம் நாளை (5ம் தேதி) அகட்டிக்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான சேவை துவக்கப்பட்ட முதல் நாளே ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

