ஏர் இந்தியா ஊழியர் விடுமுறை போராட்டம்...முடிவுக்கு வந்தது!
ஏர் இந்தியா ஊழியர் விடுமுறை போராட்டம்...முடிவுக்கு வந்தது!
ADDED : மே 10, 2024 01:28 AM

புதுடில்லி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவன ஊழியர்கள், மருத்துவ விடுப்பு எடுக்கும் போராட்டத்தை முடித்து கொள்வதாக நேற்று அறிவித்தனர். ஊழியர் சங்கத்துடன் நடந்த பேச்சுக்குப் பின், 25 ஊழியர்களின் பணி நீக்க உத்தரவை திரும்பப் பெறுவதாக, ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தை, 2021 அக்., முதல் 'டாடா குழுமம்' நிர்வகித்து வருகிறது. ஏர் இந்தியாவின் ஒரு பிரிவாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செயல்பட்டு வருகிறது.
'ஏர் ஏசியா இந்தியா' என்று அழைக்கப்பட்ட, 'ஏ.ஐ.எக்ஸ்., கனெக்ட்' நிறுவனத்தை, ஏர் இந்தியாவுடன் இணைக்கும் முயற்சியில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது. இதற்கு ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஏர் இந்தியா ஊழியர்களின் பணி நியமனம் தொடர்பான உத்தரவுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்கும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பை வெளிகாட்டும் வகையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று முன்தினம் திடீர் விடுப்பு எடுத்தனர்.
இதனால், 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பயணியர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இது நேற்றும் தொடர்ந்தது. நேற்று மட்டும், 85 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.
இது அந்த நிறுவனம் வழக்கமாக இயக்கும், 368 சேவைகளில், 25 சதவீதமாகும்.
பயணியருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, 20 முக்கிய மார்க்கங்களில் மீதமுள்ள விமானங்களை இயக்குவதாக, நிறுவனம் நேற்று அறிவித்தது. விமான சேவை தொடர்பான தகவல்களை தெரிந்து கொண்டு பயணத்தை திட்டமிடும்படி, பயணியரை நிறுவனம் கேட்டுக் கொண்டது.
ரத்து செய்யப்படும் விமானங்களுக்கான கட்டணம் முழுதுமாக திருப்பி தரப்படும் அல்லது கட்டணமில்லாமல் வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
இதற்கிடையே, 25 ஊழியர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மற்றவர்கள் விடுமுறையை ரத்து செய்து பணிக்கு திரும்பவும் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், விமான ஊழியர் சங்கத்தினருடன், ஏர் - இந்தியா நிர்வாகம் நேற்று பேச்சு நடத்தியது. நீண்ட நேரம் நடந்த பேச்சின் முடிவில், மருத்துவ விடுப்பு எடுக்கும் போராட்டத்தை கைவிடுவதாக, ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
உடனடியாக பணிக்கு திரும்பவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக, ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.