ADDED : மே 09, 2024 12:56 AM

சண்டிகர், ஹரியானாவில் மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால், பா.ஜ., ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. சட்டசபையை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் கோருகின்றன.
ஹரியானா சட்டசபை மொத்த உறுப்பினர்கள் 90. கடந்த 2019 தேர்தலில் பா.ஜ., 40 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 31 இடங்கள் கிடைத்தன. ஜே.ஜே.பி., எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களை பிடித்தது.
சுயேச்சை விலகல்
அக்கட்சியின் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது. மனோகர் லால் கட்டார் முதல்வர் ஆனார். கட்சி கட்டளைப்படி கட்டார் ராஜினாமா செய்தார். ஒரு சுயேச்சையும் விலகினார். எனவே, சட்டசபை பலம் 88 ஆனது.
கட்டாருக்கு பதில் முதல்வரான நயாப் சிங் சைனி அரசுக்கு ஜே.ஜே.பி.,யும் ஆறு சுயேச்சைகளும் ஆதரவு அளித்தனர். மார்ச்சில் ஜே.ஜே.பி., ஆதரவை விலக்கிக் கொண்டது.
நேற்று முன்தினம் மூன்று சுயேச்சைகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொண்டு, காங்கிரஸ் பக்கம் சாய்ந்தனர். இதனால், பா.ஜ., பெரும்பான்மை ஆதரவை இழந்தது. அதன் பலம் 43 ஆக உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 30 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மூன்று சுயேச்சைகள் ஆதரவு தவிர, ஜே.ஜே.பி.,யின் 10 பேரும் ஆதரித்தால் காங்கிரஸ் பலமும் 43ஆக உயரும். மெஜாரிட்டிக்கு இன்னும் இரண்டு ஓட்டுகள் தேவை.
ஐ.என்.எல்.டி., என்கிற இந்திய தேசிய லோக் தளம் கட்சியும், ஹரியானா லோஹித் கட்சியும் தலா ஒரு எம்.எல்.ஏ., வைத்திருக்கின்றன. இந்த இரண்டு கட்சி மற்றும் ஒரு சுயேச்சையின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அந்தக் கட்சி ஆட்சி அமைக்கலாம்.
பிரச்னை என்ன என்றால், குடும்ப அரசியல் குழப்பம் தான். ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன் அபய் சிங் சவுதாலா தான் ஐ.என்.எல்.டி., தலைவர்.
அவருடைய அண்ணன் மகன் துஷ்யந்த் சவுதாலா ஜே.ஜே.பி.,யின் தலைவர். அவர் காங்கிரசை ஆதரிக்க ரெடியாக இருக்கிறார். அதனால் அபய்சிங் ஆதரவு கொடுப்பது சந்தேகம்.
காங்கிரஸ் கடிதம்
என்றாலும், கிடைத்த சான்சை விடக்கூடாது என காங்கிரஸ் துடிக்கிறது. கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
பெரும்பான்மையை இழந்த பா.ஜ., ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; சட்டசபையை கலைக்க வேண்டும்; ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; சட்டசபை தேர்தலை அறிவிக்க வேண்டும் என கேட்டுள்ளது.
செப்டம்பரில் எப்படியும் தேர்தல் நடந்தாக வேண்டும். அதுவரை எந்த ஆபத்தும் வராது என்கிறார் முதல்வர் சைனி.
தாளம் போடுகிறார்
சமீபத்தில் தான் சட்டசபையில் அவர் பெரும்பான்மையை நிரூபித்தார்; ஆகவே, அடுத்த ஆறு மாதத்துக்கு சபையை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று சபாநாயகரும் தாளம் போடுகிறார்.
லோக்சபா தேர்தல் களேபரத்துக்கு நடுவில், ஹரியானாவில் ஒரு கவிழ்ப்பை நடத்திக் காட்டினால் தொண்டர்களுக்கு உற்சாகம் கூடுமே என காங்கிரஸ் யோசிக்கிறது.
அதற்கு சான்சே தரமாட்டோம் என பா.ஜ., மார்தட்டுகிறது. இரண்டுக்கும் இடையில் உள்ள கட்சிகளும், சுயேச்சைகளும் குழப்பத்தில் தவிக்கின்றன.