-கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு: 7 பேர் பிடிபட்டனர்
-கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு: 7 பேர் பிடிபட்டனர்
ADDED : ஜன 22, 2025 08:36 PM
பரேலி:உத்தர பிரதேசத்தில் கடத்தப்பட்ட தொழிலதிபரை மீட்ட போலீசார், 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு வாகனங்கள், 10 மொபைல் போன்கள், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறிது, பரேலி மாவட்ட மூத்த எஸ்.பி., அனுராக் ஆர்யா கூறியதாவது:
பரேலி மாவட்டம் பரதாரியில் வசிக்கும் தொழிலதிபர் அனுப் கட்டியார் என்பவர் கடத்தப்பட்டதாக அவரது மனைவி கிரண் கட்டியார், கடந்த 19ம் தேதி புகார் செய்தார்.
தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. மியான்பூர் கிராமத்தில், ஒரு வீட்டில் தனிப்படையினர் அதிரடி சோதனை நடத்தி, அனுப் கட்டியாரை மீட்டது. அவரைக் கடத்தி அடைத்து வைத்திருந்த கும்பலை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், பரேலி - குர்சமஸ்பூர் சாலையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அனுப் கட்டியாரை கடத்திய கும்பல் அந்தக் காரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் காரில் இருந்த 7 பேரும் சுற்றி வளைக்கப்பட்டனர். ஆனால், கடத்தல்காரர்கள் போலீசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
போலீசார் கொடுத்த பதிலடியில்- அங்கித் என்ற வினீத், ஷாஹித் மற்றும் வீர்பால் -- ஆகிய மூவரும் காயமடைந்தனர். ஏழு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து இரண்டு கார்கள், 10 மொபைல் போன்கள், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவறை பறிமுதல் செய்தனர்.
நிதி நெருக்கடியை சமாளிக்க அனுப் கட்டியாரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஹரிஷ், அங்கித், ஷாஹித், கெமேந்திரா, வீரு, ரஜத் மற்றும் லலித் ஆகியோரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.