-வீடுகளை இடிக்க தடை கேட்ட மனு தள்ளுபடி: கோவிந்த்புரியில் 300 வீடுகள் இடிப்பு
-வீடுகளை இடிக்க தடை கேட்ட மனு தள்ளுபடி: கோவிந்த்புரியில் 300 வீடுகள் இடிப்பு
ADDED : ஜூன் 11, 2025 08:14 PM

புதுடில்லி:பாட்லா ஹவுஸ் பகுதியில் வீடுகள் இடிக்கப்படுவதை நிறுத்த உத்தரவிடக் கோரிய, ஆத்மி எம்.எல்.ஏ., அமானத்துல்லா கான் தாக்கல் செய்த பொதுநல மனு, உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
தலைநகர் டில்லியின் பல பகுதிகளில், அரசு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளை, டில்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து வருகிறது. தமிழர்கள் அதிகம் வசித்த மதராஸி முகாமில் சமீபத்தில் அனைத்து வீடுகளும் இடித்துத் தள்ளப்பட்டன. அதேபோல பாட்லா ஹவுஸ், கோவிந்த்புரி, கல்காஜி உள்ளிட்ட இடங்களிலும் வீடுகள் இடிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானத்துல்லா கான், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'பாட்லா ஹவுஸ் பகுதியில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியுள்ளோரின் வீடுகளை இடிக்க டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த மனு, நீதிபதிகள் கிரிஷ் கத்பாலியா மற்றும தேஜாஸ் கரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
கான் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித், 'நிலத்தின் எல்லை நிர்ணயம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி செய்யப்படவில்லை. அப்பாவிகளின் வீடுகளை இடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்'என வாதிட்டார்.
ஆணைய வழக்கறிஞர் ஷோபனா தாகியார், 'பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே சட்ட ரீதியாக அணுக முடியும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி பொதுநல வழக்கு தொடர முடியாது'என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமானத்துல்லா கான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
300 வீடுகள் இடிப்பு
உத்தர பிரதேசம், பீஹார் மற்றும் உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூலி வேலைக்காக தலைநகர் டில்லி வந்தவர்கள், தென்கிழக்கு டில்லி கோவிந்த்புரியில்,
பூமிஹீன் ஜூகி-ஜோப்ரி முகாமில் குடிசைகள் அமைத்து வசித்தனர். கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிப்பவர்களின் வீடுகளை காலி செய்ய டில்லி மேம்பாட்டு ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருந்தது. இங்குள்ள வீடுகளை இடித்து நிலத்தை மீட்க உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், பொக்லைன் இயந்திரங்களுடன் நேற்று கோவிந்த்புரிக்கு வந்த டில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், 300க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளினர்.
அரசின் இந்த நடவடிக்கை குறித்து,ம் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி சிங், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள பதிவு:
நேற்று காலை 5:00 மணி முதல் பூமிஹீன் முகாமில் பா.ஜ.,வின் புல்டோசர் ஓடத் துவங்கியது. மூன்று நாட்களுக்கு முன்பு கூட, டில்லியில் ஒரு குடிசை கூட இடிக்கப்படாது என முதல்வர் ரேகா குப்தா கூறியிருந்தார். ஆனால், பூமிஹீன் முகாமில், 300க்கும் மேற்பட்ட வீடுகளை நேற்று இடித்தது ஏன்?
பா.ஜ., ஏழைகளின் விரோதி. இது, நீதிமன்ற உத்தரவு என்றால்,- நீதிமன்றத்தை அணுகியது யார்? இந்த ஏழைகளும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால், பாஜ.,வும் டில்லி மேம்பாட்டு ஆணையமும் ஏழைகளுக்கு எதிராக நின்று, வீடுகளை இடிக்க ஒப்புதல் அளிக்க நீதிமன்றத்தை வலியுறுத்தின.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் ரேகா, 'ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நீதிமன்ற உத்தரவை யாரும் மீற முடியாது'என கூறியிருந்தார்.
சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்ட இடத்தில் வசித்தவர்களுக்கு வேறு இடத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி பொய்களைப் பரப்பி மக்களை தவறாக வழிநடத்துகிறது. ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்த போது, ஒரு குடிசைவாசிக்குக் கூட வீடு கொடுக்கவில்லை.
உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.