-உ.பி., தனியார் பல்கலையில் உதவி பேராசிரியர் மர்ம மரணம்
-உ.பி., தனியார் பல்கலையில் உதவி பேராசிரியர் மர்ம மரணம்
ADDED : ஜூலை 02, 2024 10:30 PM
மொராதாபாத்:உத்தர பிரதேசத்தில், தனியார் பல்கலை வளாகத்தில், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் உடல் மீட்கப்பட்டது.
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அதிதி மெஹ்ரோத்ரா,27.
உ.பி., மாநிலம் மொரதாபாத் - டில்லி சாலையில் அமைந்துள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலை நோயியல் துறையில் உதவிப் பேராசிரியராக கடந்த மாதம் 16ம் தேதி சேர்ந்தார்.
பல்கலை வளாகத்திலேயே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அவரது அறையில் நேற்று இறந்து கிடந்தார்.
அவரது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து, மொரதாபாத் எஸ்.பி., அகிலேஷ் படோரியா கூறியதாவது:
அதிதி கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட அடையாளங்கள் உள்ளன. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.
ஆனால், உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தபிறகுதான் உறுதி செய்ய முடியும். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிதி மரணச் செய்தியைக் கேட்டதும் ரேவாரியிலிருந்து அவரது குடும்பத்தினர் மொராதாபாத்துக்கு வந்தனர்.
அவரது தந்தை டாக்டர் நவ்நீத் மெஹ்ரோத்ரா, “நேற்று முன் தினம் இரவு மொபைல் போனில் என் மகளை அழைத்தேன். ஆனால், அவள் போனை எடுக்கவில்லை. துாங்கியிருப்பாள் என நினைத்து மீண்டும் அழைக்கவில்லை,” என்றார்.
மொரதாபாத் சீனியர் எஸ்.பி., சத்பால், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.