வரும் 10ம் தேதி தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம்
வரும் 10ம் தேதி தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம்
ADDED : செப் 04, 2011 11:04 PM
புதுடில்லி: தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம், மூன்றாண்டு இடைவெளிக்கு பின், வரும் 10ம் தேதி, டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கிறது.
பார்லிமென்டின் இரு சபைகளின் எதிர்க்கட்சி தலைவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள், மூத்த மத்திய அமைச்சர்கள், ஆறு தேசிய கட்சிகளின் தலைவர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட 147 பேர், தேசிய ஒருமைபாட்டு கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றனர்.
இக்கவுன்சிலை 1962ம் ஆண்டு, ஜவகர்லால் நேரு துவக்கி வைத்தார். இக்கவுன்சிலின் கடைசி கூட்டம், 2008 அக்டோபர் 13ம் தேதி நடந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் சிவராஜ் பாட்டீல். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கவனிப்பது மத்திய உள்துறை அமைச்சர்தான். கடந்தாண்டு ஏப்ரலில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் மாற்றியமைக்கப்பட்டது. மாநில கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதி (தி.மு.க.,), சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்), லாலு பிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதாதளம்) உட்பட 15 கட்சிகளின் தலைவர்கள், கவுன்சிலில் இடம் பெற்றனர். வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் வரிசையில், ரத்தன் டாடா, ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், வரும் 10ம் தேதி நடைபெற இருக்கும் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம், ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றபின் நடக்கும் முதல் கூட்டம். இந்தக் கூட்டத்தில், மதம் மற்றும் ஜாதியின் பெயரால் இளைஞர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைள், அப்பாவி மக்கள் நடத்தும் போராட்டங்களால் ஏற்படும் நிலைமையை மாநில அரசுகள் மற்றும் போலீசார் கையாள வேண்டியது உட்பட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.