ADDED : ஜூலை 02, 2024 10:34 PM

புதுடில்லி:பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளைத் துவக்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
ஒப்புதல்
டில்லி அரசின் 2024 - 20-25ம் ஆண்டுகான பட்ஜெட்டில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, டில்லி அரசின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் மற்றும் சட்டத் துறை கருத்து மற்றும் ஆய்வு அறிக்கை வேண்டும்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படலாம்.
அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த பின், திட்ட அறிக்கையை துணைநிலை கவர்னருக்கு அனுப்ப வேண்டும்.
அவர் ஒப்புதல் அளித்த பிறகே திட்டத்தை நிறைவேற்ற முடியும். இந்த திட்டம் குறித்த அமைச்சரவைக் குறிப்பை பெற பணிகளைத் துவக்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் உத்தரவிட்டுஉள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒதுக்கீடு
டில்லியில் வாக்காளராக பதிவுசெய்யப்பட்ட பெண்கள் இந்த திட்டத்தில் பலன் பெறலாம். ஆனால், அரசின் வேறு எந்த திட்டத்திலும் பயனாளராக இருக்கக் கூடாது.
அப்படி இருந்தால் இந்தத் திட்டத்தில் பலன் பெற முடியாது. அதேபோல, அரசு ஊழியராகவோ, வருமான வரி செலுத்துபவராகவும் இருக்கக் கூடாது. இந்த திட்டதை செயல்படுத்த பட்ஜெட்டில் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.