13ம் நுாற்றாண்டு தமிழ் கல்வெட்டு மாலுார் தாலுகாவில் கண்டுபிடிப்பு
13ம் நுாற்றாண்டு தமிழ் கல்வெட்டு மாலுார் தாலுகாவில் கண்டுபிடிப்பு
ADDED : செப் 12, 2024 05:54 AM

மாலுார்: மாலுார் தாலுகாவில் இரண்டு பழமையான 13 நுாற்றாண்டு தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கோலார் மாவட்டத்தில் கோலார், முல்பாகல், தங்கவயல், பங்கார்பேட்டை ஆகிய இடங்களில் பழந்தமிழ் கல்வெட்டுக்கள் பல இருந்துள்ளன. சில இடங்களில் பாதுகாப்புடன் உள்ளன.
பல இடங்களில் ஓரிரு கல்வெட்டுக்களை தவிர மற்றவை மறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொல் பொருள் ஆய்வுத் துறைக்கு புகார்களும் சென்றுள்ளன.
இந்த நிலையில், மாலுார் தாலுகாவில் உள்ள டேக்கல் - மாஸ்தி சாலையில், சிக்கதானவல்லி கிராமத்தில் இரண்டு பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டேக்கல் அருகே உள்ள எலேசந்திரா பள்ளி மாணவர்கள் இந்த கல்வெட்டுகளை பார்த்து, தம் வகுப்பு ஆசிரியை ஷைலாஜாவிடம் கூறியுள்ளனர்.
அந்த கல்வெட்டு குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய ஆசிரியை, வரலாறு மற்றும் சட்ட வல்லுார்கள் நரசிம்மன், தனபால், கல்லுாரி பேராசிரியர் கோபி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அப்பகுதி கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் எழுத்துக்களை ஆய்வு செய்யும் வல்லுனர்கள் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரியின் கோவிந்தராஜன் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் கல்வெட்டை ஆய்வு செய்தனர். அவை 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டுகள் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
கல்வெட்டின் காலம் கி.பி. 1,232. பூர்வாதிராயர் என்ற சிற்றரசர், அவரது வம்சத்தினர் பற்றிய செய்தியை சொல்கிறது. 13ம் நுாற்றாண்டில் இப்பகுதி மாசண்டி நாடு என்று அழைக்கப்பட்டுள்ளது.
அவரது ஆட்சிக்காலத்தில் கோவில் கட்டுமானங்களும், தான தர்மங்களும் செய்யப்பட்டுள்ளன. பிராமணர்களுக்கு நன்கொடை வழங்கிய விஷயங்கள் இருக்கின்றன.
மற்றொரு கல்வெட்டை ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுக்குப் பின் கல்வெட்டுகள் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.