ADDED : ஆக 06, 2024 01:24 AM
புதுடில்லி, மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது:
காங்., விவசாயிகளுக்கு எதிரானது. நீண்ட காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த அக்கட்சி, விவசாயிகளின் நலனுக்காக எதையுமே செய்யவில்லை. பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்ததில் இருந்து விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதி சார்ந்த தோட்டக்கலை பயிர்கள் தொடர்பான, 100 தொகுப்பு மையங்கள், 18,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மேலும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், 6,800 கோடி ரூபாய் செலவில் எண்ணெய் வித்துக்கள் திட்டத்தை அரசு விரைவில் துவங்கும்.
விவசாயத்தில் பிரச்னைகள் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறேன். இவற்றுக்கு தீர்வுகளும் உள்ளன. இது தொடர்பாக, விவசாயிகள் சங்கத்துடன் அரசு பேச்சு நடத்தும். விவசாயிகளை ஓட்டு வங்கிகளாகக் கருதாமல், மனிதர்களாக அரசியல் கட்சிகள் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.