ADDED : ஏப் 13, 2024 05:46 AM

சாம்ராஜ் நகர்: ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1.57 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.170 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறாமல் இருக்க, ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று காலை பெங்களூரில் இருந்து சாம்ராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகாலை நோக்கி 'கேஏ 17 இசட் 9447' என்ற கார் சென்று கொண்டு இருந்தது.
ஹனுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சந்தேகலா சோதனைச் சாவடியில் காரை சோதனையிட்டபோது, ஒரு கோடியே 57 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2.17 கிலோ தங்கம் இருந்தது. இதற்கான ஆவணங்கள் கேட்டபோது, சரியான பதில் கிடைக்காததால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வருமான வரித்துறை உதவி இயக்குனர் ரங்கநாத், அதிகாரிகள் ரகு, திவாகர் ஆகியோர் விசாரிக்கின்றனர்.

