பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் புர்கினா பாசோவில் 200 பேர் பலி
பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் புர்கினா பாசோவில் 200 பேர் பலி
ADDED : ஆக 27, 2024 01:01 AM
பார்சலோகா: மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில், அல் குவைதா அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 200 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்; 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
புர்கினா பாசோவில் உள்ள முக்கிய நகரமான கயாவை அடுத்த பார்சலோகோ என்ற சிறிய நகரம் உள்ளது. இங்கு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, பாதுகாப்பு படையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, ஏராளமான பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நேற்று பதுங்கு குழிகளை தோண்டினர். அப்போது, துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டனர்.
இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அங்கிருந்த ஆயுதங்கள், மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். இந்த தாக்குதலுக்கு, அல் - குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல் -இஸ்லாம் வால்-முஸ்லிம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
புர்கினா பாசோவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல், அல் குவைதா, ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த 2011ல், லிபியாவின் உள்நாட்டு போர் துவங்கியது முதல், இங்கு வன்முறை மற்றும் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும், 8,400 பேர் பயங்கரவாத தாக்குதலுக்கு இங்கு பலியாகியுள்ளனர்.