ADDED : ஆக 22, 2024 03:59 AM
சிக்பல்லாப்பூர்: போலி நெக்லஸ் கொடுத்து, நகை செய்யும் ஆசாரியிடம் 24 லட்சம் ரூபாய் மோசடி செய்த, ஐந்து பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
ஆந்திராவின் நந்தியாலை சேர்ந்தவர் அல்லுரையா. நகை செய்யும் தொழிலாளி.
இவரும் ஆந்திராவின் யலுரு கிராமத்தின் சபீர் என்பவரும் நண்பர்கள். கடந்த மாதம் அல்லுரையாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய சபீர், 'என் நண்பர் அகமது உசைன் என்பவர், சிக்கபல்லாப்பூரின் கவுரிபிதனுாரில் வசிக்கிறார்.
மூன்று விலை உயர்ந்த தங்க நெக்லஸ்கள் வைத்துள்ளார். அவருக்கு பணம் தேவைப்படுவதால், கிடைக்கும் பணத்திற்கு நெக்லஸ்களை விற்க உள்ளார். உங்களுக்கு தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளுங்கள்' என கூறினார்.
இதை நம்பிய அல்லுரையா, நெக்லஸ்களை 24 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு ஒப்புக்கொண்டார். 19ம் தேதி கவுரிபிதனுாருக்கு ஒரு காரில் அல்லுரையா, சபீர், சபீரின் நண்பர்கள் நரசிம்மையா, சுரேந்திரா, பிரம்மா ஆகியோர் சென்றனர்.
அகமது உசைனிடம் 24 லட்சம் ரூபாய் கொடுத்து, மூன்று நெக்லஸ்களை வாங்கிவிட்டு ஊருக்கு புறப்பட்டனர். காரில் வரும்போது நகைகளை சோதனை செய்தபோது போலி நகை என்பது தெரிந்தது.
இது பற்றி சபீரிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை. தன்னை ஏமாற்றி போலி நகைகள் கொடுத்து 24 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதை அல்லுரையா உணர்ந்தார். கவுரிபிதனுார் ரூரல் போலீசில் புகார் செய்தார். சபீர் உட்பட ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவாகி உள்ளது. விசாரணை நடக்கிறது.