ADDED : மே 30, 2024 12:34 AM
புதுடில்லி, லோக்சபா தேர்தலில் இந்த ஆண்டு போட்டியிடும் வேட்பாளர்களில் 2,572 பேர் கோடீஸ்வரர்கள் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை இணைந்து, தற்போது நடந்து வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 8,337 வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2009ல் 368 அரசியல் கட்சிகள் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டன. இது 2014ம் ஆண்டில் 464 ஆக அதிகரித்தது. கடந்த 2019ல் 677 கட்சிகள் போட்டியிட்ட நிலையில், இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எண்ணிக்கை 751 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை 104 சதவீதம் அதிகம்.
இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் 8,360 வேட்பாளர்களில் 1,333 பேர் தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள்; 532 பேர் மாநில கட்சிகளை சேர்ந்தவர்கள்; அங்கீகரிக்கப்படாத கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் 2,580 பேர்; 3,915 பேர் சுயேச்சைகள்.
இதில், தேசிய கட்சிகளை சேர்ந்த 1,333 வேட்பாளர்களில் 443 பேர் தங்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை வெளிப்படுத்தி உள்ளனர். 295 பேர் தீவிர குற்ற வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர், மாநில கட்சி வேட்பாளர்கள் 532 பேரில், 249 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர், 169 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன.
மொத்தம் போட்டியிடும் 8,337 வேட்பாளர்களில் 2,572 பேர் கோடீஸ்வரர்கள்; இதில், தேசிய கட்சியை சேர்ந்த கோடீஸ்வர வேட்பாளர்கள் 906 பேர், மாநில கட்சி வேட்பாளர்கள் 421 பேர், அங்கீகரிக்கப்படாத கட்சிகளை சேர்ந்தவர்கள் 572 பேர், சுயேச்சைகள் 673 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.