2வது திருமணம் செய்யலாமே: எம்.பி.,யை கிண்டலடித்த அசாம் முதல்வர்
2வது திருமணம் செய்யலாமே: எம்.பி.,யை கிண்டலடித்த அசாம் முதல்வர்
ADDED : ஏப் 01, 2024 12:13 AM

குவஹாத்தி: ''அசாமின் துப்ரி எம்.பி., பத்ருதின் அஜ்மல் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் இப்போதே செய்து கொள்ளட்டும். லோக்சபா தேர்தலுக்கு பின் செய்து கொண்டால் அவர் சிறை செல்ல நேரிடும்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு ஏப்., 19ல் துவங்கி மூன்று கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதற்கான பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த துப்ரி தொகுதி எம்.பி., பத்ருதின் அஜ்மல், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவர் சமீபத்தில் பேசுகையில், 'எனக்கு வயதாகிவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு என் உடலில் சக்தி இருக்கிறது. இதை, முதல்வர் ஹிமந்த விரும்பாவிட்டாலும் என்னால் முடியும்' என்றார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியதாவது:
பத்ருதின் அஜ்மல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் இப்போதே செய்து கொள்ளட்டும். லோக்சபா தேர்தல் முடிந்த பின், மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துவிடும்.
அப்போது பல திருமணங்கள் செய்து கொள்வது சட்டவிரோதமாகிவிடும். தேர்தலுக்கு பின் திருமணம் செய்து கொண்டால் அவர் கைது செய்யப்படுவார்.
இப்போது வரை அவருக்கு ஒரு மனைவி தான். இன்னும் மூன்று, நான்கு திருமணங்கள் கூட செய்து கொள்ளுங்கள். அதை தேர்தலுக்கு முன்னதாகவே செய்து கொள்வது நலம்.
இவ்வாறு அவர் கூறினார்.

