ADDED : ஆக 08, 2024 11:56 PM

பெங்களூரு: கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ஜி.எஸ்.சங்ரேஷி, கடந்த மாதம் பொறுப்பேற்றார். பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள அலுவலகத்தில், நேற்று அவர் கூறியதாவது:
மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடக்கவில்லை. பெங்களூரு மாநகராட்சி தேர்தல், நான்கு ஆண்டுகளாக நடக்கவில்லை.
அரசு இட ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை. இதை கண்டித்து, அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. இரண்டு தேர்தல் தொடர்பாகவும், உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்த உடனே தேர்தல் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். கவுன்சிலர்களின் பதவி காலம் முடிந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படவில்லை என்றால், தேர்தல் கமிஷன் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.
அதன்படி நாங்கள் செயல்பட்டுள்ளோம். அடுத்த வாரம், மைசூரு, ஷிவமொகா, துமகூரு ஆகிய மூன்று மாநகராட்சி தேர்தல் கால அட்டவணை அறிவிக்கப்படும். அரசு இன்னும் இட ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை.
ஆனால், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி, பழைய இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும். நவம்பருக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு, அரசு விரைவில் ஒத்துழைப்பு தர வேண்டும். இதுவரை பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான வார்டு வாரியாக இட ஒதுக்கீட்டை அரசு அறிவிக்கவில்லை. இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வரும் 20ம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
பிப்ரவரிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால், 15வது நிதி கமிஷன் வழங்கிய, 2,000 கோடி ரூபாய், திரும்ப சென்று விடும். தேர்தல் நடத்தினால் மட்டுமே நமது பங்கு நிதி நம்முடனே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.