அரசு பணத்தில் உல்லாச பயணம் சர்ச்சையில் சிக்கிய 3 ஐ.ஏ.எஸ்.,கள்
அரசு பணத்தில் உல்லாச பயணம் சர்ச்சையில் சிக்கிய 3 ஐ.ஏ.எஸ்.,கள்
ADDED : ஏப் 12, 2024 02:27 AM

சண்டிகர், சண்டிகரைச் சேர்ந்த மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 2015ல் லட்சக்கணக்கில் அரசு பணத்தை செலவு செய்து பிரான்ஸ் சென்று வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சண்டிகர் யூனியன் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகராக உள்ளது. சுவிஸ் - பிரெஞ்ச் கட்டடக்கலை நிபுணரான, லீ கார்பூசியர் என்பவரால் இந்த நகரம் வடிவமைக்கப்பட்டது.
இங்குள்ள சட்டசபை, நீதிமன்றம் உள்ளிட்ட பெரும்பாலான கட்டடங்களை அவர் தான் வடிவமைத்தார். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள லீ கார்பூசியர் அறக்கட்டளை, 2015ல் அவரது 50வது நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்தியது.
அதில் பங்கேற்க, சண்டிகர் நிர்வாகத்துக்குஅழைப்பு விடுக்கப்பட் டது. இதில் பங்கேற்ற நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை சண்டிகர் நிர்வாகம் பரிந்துரைத்தது. அதில், மூன்று பேருக்கு உள்துறை அனுமதி வழங்கியது.
அதன்படி, சண்டிகர் நிர்வாகியின் அப்போதைய ஆலோசகர் விஜய் தேவ், அப்போதைய உள்துறை செயலர் அனுராக் அகர்வால், அப்போதைய அரசு பணியாளர் நலத்துறை செயலர் விக்ரம் தேவ் தத் ஆகியோர் பிரான்ஸ் சென்றனர்.
இவர்கள் மூன்று பேரும், மாறி மாறி மற்றவர்களுக்கான அனுமதி ஆணையில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
சண்டிகரின் தலைமை கட்டடக்கலை நிபுணருக்கு மட்டும் தான் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், மாறாக மக்கள் பணத்தில் மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சென்று வந்துள்ளதாகவும், மத்திய கணக்கு தணிக்கை இயக்குனரகம் தற்போது தெரிவித்துள்ளது.
இந்த பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் சண்டிகர் நிர்வாகம் செய்துள்ளது. ஒரு நாள் பயணத்தை ஏழு நாட்கள் நீடித்ததும் தெரியவந்துள்ளது.
அரசு அதிகாரிகள் ஐந்து நாட்களுக்கு மேல் வெளிநாட்டு பயணம் செல்ல, தனி அனுமதி பெற வேண்டும். அதுவும் பெறப்படவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
விமானத்தில் இவர்களுக்கான 'பிசினஸ் கிளாஸ்' டிக்கெட்டுக்கு தலா, 1.77 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பிரான்சில் இவர்கள் தங்கிய நட்சத்திர விடுதிக்கு ஏழு நாட்களுக்கு 14 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஏழு நாள் பயணத்துக்கு 25 லட்சம் ரூபாய்க்கு மேல் அரசு பணம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இது, அனுமதிக்கப்பட்ட தொகையை விட 40 சதவீதம் அதிகம். இதில், இரண்டு அதிகாரிகள் தற்போது பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்; ஒருவர் பணி ஓய்வு பெற்றுள்ளார்.
பணி ஓய்வு பெற்ற விக்ரம் குமார் தேவ், டில்லி தேர்தல் கமிஷனராக உள்ளார். விக்ரம் தேவ், விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ., இயக்குனர் ஜெனரலாக உள்ளார். அனுராக் அகர்வால், ஹரியானாவின் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ளார்.
''இந்த மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சண்டிகர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

