ADDED : மார் 23, 2024 01:01 AM
சிம்லா, ஹிமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு கடந்த மாதம் நடந்த ராஜ்யசபா தேர்தலில், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டளித்தனர். அவர் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த ஆசிஷ் சர்மா, ஹோசியார் சிங், தாக்குர் ஆகிய மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் திடீரென நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சட்டசபை செயலரிடம் அளித்தனர். முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாக்குரை சந்தித்த பின், ராஜினாமா கடிதத்தை சட்டசபை செயலரிடம் அளித்தனர்.
அவர்கள் விரைவில் பா.ஜ.,வில் சேரலாம் என கூறப்படுகிறது.
பதவியை ராஜினாமா செய்த ஹோசியார் சிங், கூறுகையில், ''முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, எங்களையும், எங்கள் குடும்பத்தினரையும் குறிவைத்து பொய் வழக்கு பதிவு செய்வதால் பதவியை ராஜினாமா செய்கிறோம். இனி பா.ஜ.,வில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம்,'' என்றார்.

