ADDED : மே 09, 2024 10:23 PM
பெங்களூரு, மே 10-
லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி., அதிகாரிக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
உத்தர கன்னடா, ஹொன்னாவரில் ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்தில், சூப்பிரண்டாக பணியாற்றியவர் ஜிதேந்திரகுமார் தாக்கூர், 45. கடந்த 2021ல் தொழில் அதிபர் ஒருவர் செலுத்த வேண்டிய, ஜி.எஸ்.டி.,யை தள்ளுபடி செய்ய, ஜிதேந்திரகுமார் தாக்கூர் 25,000 ரூபாய் லஞ்சம் வாங்கினார். அவரை சி.பி.ஐ., கைது செய்தது.
பெங்களூரில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. ஜிதேந்திரகுமார் தாக்கூருக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ரமாகாந்த் உத்தரவிட்டார்.