முறிந்து விழும் மரங்களை அகற்ற தினமும் ரூ.3.58 லட்சம் செலவு
முறிந்து விழும் மரங்களை அகற்ற தினமும் ரூ.3.58 லட்சம் செலவு
ADDED : ஆக 16, 2024 06:44 AM
பெங்களூரு: பெங்களூரில் மழை பெய்தால், ரோட்டில் முறிந்து விழும் மரங்கள், மரக்கிளைகளை அகற்ற தினமும் 3.58 லட்சம் ரூபாய் வீதம் செலவிடப்படுகிறது.
பெங்களூரில் சிறிய அளவில் மழை பெய்தாலும், நுாற்றுக்கணக்கான மரங்கள், மரக்கிளைகள் முறிந்து விழுகின்றன. இவற்றை மாநகராட்சி அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்கிறது.
இதற்காகவே மாநகராட்சி வனப்பிரிவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் மரம், மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்கின்றன.மரங்கள், மரக்கிளைகளை அகற்றவே, தினமும் 3.50 லட்சம் ரூபாயை மாநகராட்சி செலவிடுகிறது. இவ்வளவு செலவிட்டும், இத்தனை குழுக்கள் இருந்தும் நகரின் பல்வேறு நடைபாதைகள், ரோடு ஓரங்களில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கவில்லை.
ஒரு மாதத்துக்கு முன் விழுந்த மரக்கிளைகள், இப்போதும் அதே இடத்தில் விழுந்து கிடப்பதை பல இடங்களில் காணலாம். இது குறித்து புகார்கள் வந்துள்ளன.
பெங்களூரு மாநகராட்சி வனப்பிரிவு, மரங்களை அப்புறப்படுத்தும் ஒரு குழுவுக்கு, தினமும் தலா 11,964 ரூபாய் வீதம் 30 குழுக்களுக்கு 3,58,920 ரூபாய் வழங்குகிறது. ஆண்டுக்கு 12.92 கோடி ரூபாய் செலவிடுகிறது. இந்த குழுக்களுக்கு 365 நாட்களும் வேலை இருப்பது இல்லை. ஆனால் பணம் மட்டும் தினமும் வழங்கப்படுகிறது.
பெங்களூரு மாநகராட்சி வனப்பிரிவு, 2024 - 25ம் ஆண்டில் 1.5 லட்சம் செடிகள் நட்டு வளர்க்க திட்டம் வகுத்துள்ளது. இதற்காக 12 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இதை விட அதிகமான பணத்தை விழுந்த மரம், மரக்கிளைகளை அகற்ற மாநகராட்சி செலவிடுவதற்கு, பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.