தொழிலதிபரை கடத்தி ரூ.1.5 கோடி பறிப்பு பெங்களூரில் 4 ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கைது
தொழிலதிபரை கடத்தி ரூ.1.5 கோடி பறிப்பு பெங்களூரில் 4 ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கைது
ADDED : செப் 12, 2024 01:05 AM
பெங்களூரு,கர்நாடகாவில் தொழிலதிபரை கடத்தி, 1.5 கோடி ரூபாய் பறித்த நான்கு ஜி.எஸ்.டி., அதிகாரிகளை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு புறநகர் பகுதியான பையப்பனஹள்ளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டிற்கு, ஐந்து பேர் அடங்கிய கும்பல் ஒன்று கடந்த வாரம் இரு வாகனங்களில் வந்தது. அப்போது, அவரை மிரட்டி, கடத்திச் சென்ற அக்கும்பல், நகரம் முழுதும் வலம் வந்தது.
அதன்பின் அத்தொழிலதிபரின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அதிகளவு பணம் கேட்டு மிரட்டியது. இதனால், அதிர்ச்சியடைந்த தொழிலதிபர், அக்கும்பலிடம் 1.5 கோடி ரூபாய் அளித்துள்ளார்.
அதன்பின் அக்கும்பல் அவரை விடுவித்தது. இதையடுத்து, பெங்களூரு புறநகர் பையப்பனஹள்ளி போலீசில் அத்தொழிலதிபர் புகார் அளித்தார்.
இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பெங்களூரு நகர குற்றப்பிரிவுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து, கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது, தொழிலதிபரை கடத்தி மிரட்டல் விடுத்தது ஜி.எஸ்.டி., அதிகாரிகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, குற்றச்செயலில் ஈடுபட்ட ஜி.எஸ்.டி., அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர். இதில், இரண்டு பேர் கண்காணிப்பாளராகவும், மற்ற இருவர் இன்ஸ்பெக்டர்களாகவும் உள்ளனர்.
அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இதுபோன்ற செயலில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இதற்கிடையே, கைதான நான்கு பேர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.