ADDED : ஆக 01, 2024 11:11 PM
மங்களூரு: மங்களூரு, டவுன் கொடியால்பைலு பகுதியில் மாவட்ட சிறை உள்ளது. இந்த சிறையில் பல வழக்குகளில் கைதான தண்டனை பெற்ற கைதிகள், விசாரணை கைதிகள் என, 389 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் கைதிகள் மொபைல் போன்கள், கஞ்சா பயன்படுத்துவதாக, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வாலுக்கு தகவல் கிடைத்தது. சிறையில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். கடந்த வாரம் நடந்த சோதனையில் கைதிகள் அறையில் இருந்து 25 மொபைல் போன்கள், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 110 கைதிகளின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், 40 கைதிகள் கஞ்சா பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது.
இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. சிறை ஊழியர்கள் உதவியுடன், கைதிகள் கஞ்சா பயன்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சிறை ஊழியர்கள் சிலரிடம் விசாரணை நடத்தும் வாய்ப்பு உள்ளது.