ADDED : செப் 12, 2024 07:33 PM
விக்ரம் நகர்,:'பிசினஸ் பிளாஸ்டர்' திட்டத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் வழங்கிய 40 ஆயிரம் யோசனைகளில் இருந்து ஸ்டார்ட் அப்கள் துவக்கப்பட்டதாக மாநில கல்வி அமைச்சர் ஆதிஷி தெரிவித்தார்.
மாணவர்களின் புதுமையான யோசனைகளை வரவேற்கும் விதமாக, நடப்பு கல்வி ஆண்டுக்கான 'பிசினஸ் பிளாஸ்டர்' என்ற திட்டத்தை ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆதிஷி கூறியதாவது:
நடப்பு கல்வி ஆண்டுக்கான 'பிசினஸ் பிளாஸ்டர்' திட்டத்துக்கு 40 கோடி ரூபாய் முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், 2.45 லட்சம் மாணவர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மாணவர்கள் தெரிவிக்கும் புதுமையான யோசனை ஸ்டார்ட் அப்களாக மாற்றும் வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு மாணவர்கள் தெரிவித்த 40 ஆயிரம் யோசனைகளின்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள், தொழில்நுட்பம், வாசனை திரவியங்கள், சாக்லேட் உள்ளிட்ட ஏராளமான ஸ்டார்ட்அப்கள் தொடங்கப்பட்டன.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்னரே வேலை வழங்கும் தொழில் முனைவோராக மாணவர்கள் மாறுவார்கள். முந்தைய ஆண்டின் வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆண்டும் அமையும்.
மாணவர்களிடையே தொழில் முனையும் எண்ணத்தையும் சுயதொழில்களை மேம்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டது. அத்துடன் வேலை தேடுபவர்களை விட வேலைகளை உருவாக்குபவர்களாக மாணவர்களை மாற்ற இந்தத் திட்டம் உதவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

