ADDED : ஜூன் 16, 2024 07:24 AM

எல்லாபுராவில், வீடு ஒன்றில் ஒரே நேரத்தில் 42 பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளன. இதை வீட்டினர் பக்தியுடன் பூஜித்தனர்.
அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும். இதை 'நிஷகாந்தி' என்றும் அழைப்பர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இரவில் பூக்கும் அபூர்வ மலராகும். வெண்ணிறத்தில் மூன்று இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக தென்படும்.
அமெரிக்காவின், மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்ட பிரம்ம கமலம், பொதுவாக ஜூலை மாதத்தில் பூக்கும். இலங்கையில் இந்த மலரை, 'சொர்க்கத்தின் பூ' என வர்ணிக்கின்றனர். புத்தருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில், ஆண்டுக்கு ஒரு முறை, தேவர்கள் பிரம்ம கமலம் பூக்களாக உருவெடுத்து, பூமிக்கு வருவதாக அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர்.
ஹிந்து மதத்தில் பிரம்ம கமலம், புனிதமானதாக கருதப்படுகிறது. ஆன்மிக ரீதியிலும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இத்தகைய பூக்கள் பூக்கின்றன.
உத்தரகன்னடா, எல்லாபுராவின், ராமாபுராவில் வசிப்பவர் கணேஷ் பாண்டவபுரா. இவரது வீட்டில் பிரம்ம கமலம் செடி உள்ளது. கடந்தாண்டு இவரது வீட்டில் ஒரே நேரத்தில் 84 பிரம்மகமலம் பூக்கள் மலர்ந்தன. இம்முறை 42 பூக்கள் மலர்ந்துள்ளன.
நேற்று முன் தினம் நள்ளிரவு, 12:40 மணியளவில் இப்பூக்கள் மலர்ந்தன. இதை பார்த்து, அவ்வீட்டினர் பக்தி பரவசம் அடைந்தனர். இந்த பூக்கள் மலரும் போது, என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது ஐதீகம். எனவே கணேஷ் பாண்டவபுரா குடும்பத்தினர், பூக்களுக்கு பூஜை செய்து வேண்டினர்.
தகவலறிந்து சுற்றுப்பகுதி மக்கள், இவரது வீட்டில் மலர்ந்த பிரம்ம கமலத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்தனர். பக்தியுடன் வணங்கினர்- நமது நிருபர் -.