மராத்தி உள்ளிட்ட 5 மொழிகளுக்கு கிடைத்தது செம்மொழி அந்தஸ்து
மராத்தி உள்ளிட்ட 5 மொழிகளுக்கு கிடைத்தது செம்மொழி அந்தஸ்து
ADDED : அக் 04, 2024 12:28 AM
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது மராத்தி, பெங்காலி, பாலி, பிராகிருதம், அசாமி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி செய்தார். அவர் கூறியதாவது:
இதுவரை தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளைச் செம்மொழிகளாக அறிவித்துள்ளோம். இதில் மேலும் ஐந்து மொழிகள் சேர்க்கப்படுவது நாட்டின் மொழி பாரம்பரியத்தின் செழுமையையும், பன்முகத்தன்மையையும் அங்கீகரித்து கொண்டாடுவதற்கான அரசின் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சமையல் எண்ணெய்
மேலும், சமையல் எண்ணெய் உற்பத்தியில் நம் நாட்டை தன்னிறைவு பெற செய்வதற்காக, 10,103 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சமையல் எண்ணெய் வித்துக்களுக்கான தேசிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, 2022 - 23ல் 3.90 கோடி டன்னாக இருந்த எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை, 2030 - 31ல், ஏழு கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில், 50 சதவீதம் இறக்குமதி வாயிலாக கிடைக்கிறது. அதை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு பெறுவதே இத்திட்டத்தின் நோக்கம்.