அரசு பணி வினாத்தாளில் 50 பிழைகள்: கர்நாடகாவில் மறுதேர்வு நடத்த உத்தரவு
அரசு பணி வினாத்தாளில் 50 பிழைகள்: கர்நாடகாவில் மறுதேர்வு நடத்த உத்தரவு
ADDED : செப் 02, 2024 11:56 PM

பெங்களூரு,: கே.பி.எஸ்.சி., நடத்திய தேர்வின் கன்னட வினாத்தாளில், 50க்கும் மேற்பட்ட பிழைகள் இருந்ததால், இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடத்தும்படி முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கே.பி.எஸ்.சி., எனப்படும் கர்நாடகா பணியாளர் தேர்வாணையம் சார்பில், 'கர்நாடகா அட்மின் சர்வீஸ்' எனும் கே.ஏ.எஸ்., மற்றும், 'குரூப் பி'யில் காலியாக உள்ள 384 பணியிடங்களுக்கு, ஆகஸ்ட் 27ல் முதல் நிலை தேர்வு நடந்தது.
இதில், கன்னட வினாத்தாளில், 50க்கும் அதிகமான பிழைகள் இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் குற்றஞ்சாட்டினர்.
ஆங்கிலத்தில் இருந்து, கன்னடத்துக்கு மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகள் மட்டுமே இருந்தன. சரியான கன்னட வார்த்தைகள் இடம்பெறவில்லை.
இது மாணவர்களுக்கு சரியாக புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதை கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி, மறுதேர்வு நடத்தும்படி கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சமூகவலைதளத்தில், முதல்வர் சித்தராமையா நேற்று கூறியிருப்பதாவது:
கே.பி.எஸ்.சி., நடத்திய தேர்வில், கன்னட வினாத்தாள் சரியாக மொழி பெயர்க்கப்படவில்லை என்ற தகவல், என் கவனத்துக்கு வந்துள்ளது.
இதனால், தேர்வு எழுதியோருக்கு அநீதி ஏற்பட கூடாது என்பதற்காக, இன்னும் இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடத்தும்படி கே.பி.எஸ்.சி.,க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளறுபடியை ஏற்படுத்திய அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அடுத்து நடக்கும் தேர்வுகளை, மிகவும் பொறுப்புடன், நேர்மையாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஊழியர்கள் நியமனத்தில், நேர்மை மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும். தேர்வு எழுதுவோரின் நலன் காக்க அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.