ADDED : செப் 10, 2024 10:44 PM
சண்டிகர்:“விவசாயிகளுக்கு நெல் வைக்கோலை அழிக்க, மேலும் 4,945 பயிர்க் கழிவு அழிப்பு இயந்திரங்கள் வாங்க பஞ்சாப் அரசு அனுமதி வழங்கியுள்ளது,” என, விவசாயத் துறை அமைச்சர் குர்மீத் சிங் குதியான் கூறினார்.
இதுறித்து குர்மீத் சிங் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது 5,534 பயிர்க் கழிவு அழிப்பு இயந்திரங்கள் உள்ளன. இதில், 4,640 இயந்திரங்கள் விவசாயிகள் தனிப்பட்ட முறையில் வாங்கியுள்ளனர். பதிவு செய்யப்பட்ட உழவர் குழுக்கள் - 745, கூட்டுறவு சங்கங்கள் - 119, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் -30 இயந்திரங்கள் வாங்கியுள்ளன. தற்போது மேலும் 4,945 இயந்திரங்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நெல் அறுவடைக்குப் பின், வைக்கோல் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தேசிய தலைநகர் பிராந்தியம், பஞ்சாப், ஹரியானா மற்றும் டில்லியை ஒட்டியுள்ள உத்தரப் பிரதேசத்தில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டுகிறது. எனவே, கழிவுகளை எரிப்பதைத் தடுத்து அவற்றை அழித்து உரமாக மாற்ற இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.