ADDED : மே 10, 2024 01:25 AM
இம்பால், மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 5,457 பேரை, மாநில அரசு அடையாளம் கண்டுள்ளதாக முதல்வர் பைரேன் சிங் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் பற்றிய ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், அண்டை நாடான மியான்மரில் இருந்து வந்து மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டத்தில் தங்கியுள்ள 5,457 பேரை, அரசு அடையாளம் கண்டுள்ளது. இவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் பைரேன் சிங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களில் 5,173 பேரின் பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது தவிர பைகோ, ஹுய்மி தானா, சங்கலோக் ஆகிய அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசு உதவி செய்து வருகிறது.
இந்த மாத துவக்கத்தில், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 38 பேர் தெங்னோபால் மாவட்டத்தின் மோரே நகரம் வழியாக திருப்பி அனுப்பப்பட்டனர். முதல்கட்டமாக, 77 சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.