ADDED : ஆக 04, 2024 11:11 PM

பெங்களூரு: ''நாட்டில் பல்வேறு மாநிலங்களின் ராஜ்பவனை பயன்படுத்தி 56 முறை ஆட்சியை கவிழ்த்த வரலாறு; கவர்னர்களை அசிங்கப்படுத்திய செயல் காங்கிரசுக்கு உண்டு,'' என ஹாவேரி பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'மூடா' முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு கவர்னர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவில் கவர்னராக இருந்த பரத்வாஜ், எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி அளித்தார்.
ஆனால், நீதிமன்றமோ, அவரை குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து காங்கிரஸ் அரசு, மன்னிப்பு கேட்டது.
கவர்னர்களை அசிங்கப்படுத்திய செயல், காங்கிரசுக்கு உண்டு. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கவர்னரை பயன்படுத்தி, 56 முறை சம்பந்தப்பட்ட மாநில ஆட்சியை கவிழ்த்த வரலாறு காங்கிரசுக்கு உள்ளது.
நான் முதல்வராக இருந்தபோது, முறைகேடு நடந்தது என்றால், ஏன் மவுனமாக உள்ளீர்கள். ஆட்சி உங்கள் கையில் உள்ளது; நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்.
இந்த அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே இடமாற்றம் துவங்கி விட்டது. வளர்ச்சி பணிக்கு எந்த நிதியும் விடுவிக்கவில்லை. இந்த ஆட்சியில், ஊழல் மயமாக்கப்பட்டு உள்ளது. அதன் கீழ் இடமாற்றங்கள் நடந்து வருகின்றன.
இடமாற்றத்துக்கு அதிகப்படியான பணம் கேட்பதால், ஒட்டுமொத்த ஊழியர்களும் மன அழுத்தத்தில் உள்ளனர். மேல் மட்டத்தில் இருந்து கீழே வரை ஊழல் நடப்பதால், எஸ்.ஐ., பரசுராம் போன்ற மரணங்கள் நிகழ்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.