மங்களூரு பெயர் பலகையில் 60 சதவீதம் கன்னடம் கட்டாயம்
மங்களூரு பெயர் பலகையில் 60 சதவீதம் கன்னடம் கட்டாயம்
ADDED : ஜூன் 08, 2024 04:18 AM

மங்களூரு : ''வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், கன்னட மொழியை 60 சதவீதம் பயன்படுத்தாதவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்,'' என்று மங்களூரு மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் எச்சரித்துள்ளார்.
பெங்களூரு உட்பட கர்நாடகா முழுதும் வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், வர்த்தக மையங்கள், கடைகள் என அனைத்து நிறுவனங்களின் பெயர் பலகைகளும், 60 சதவீதம் கன்னட மொழியில் இருப்பது கட்டாயம்.
இந்த விதிமுறை கடந்த பிப்ரவரியிலேயே அமலுக்கு வந்தது. இதையடுத்து, பெயர் பலகையில் 60 சதவீதம் கன்னட மொழி இருக்கும் வகையில், விளம்பர போர்டுகள் மாற்றப்பட்டுள்ளது. ஒரு சிலர் இன்னும் உத்தரவை மதிக்காமல் உள்ளனர்.
விதிமுறையை மதிக்காத சிலருக்கு, அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையில், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரிலும் இந்த விதிமுறை அமலிலும் இருந்தும், பலரும் விதிமுறை மீறி செயல்படுகின்றனர்.
இது குறித்து, மங்களூரு மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் நேற்று கூறியதாவது:
கர்நாடக அரசின் மொழி கொள்கைபடி, மாநிலத்தில் செயல்படும் அனைத்து விதமான தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அரங்குகள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள், பொழுது போக்கு மையங்கள், ஹோட்டல்களின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி பயன்படுத்துவது கட்டாயம்.
அதன்படி, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட நிறுவனங்கள், கன்னட மொழிக்கு முன்னுரிமை வழங்கி, விதிமுறையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
ஆனால், சில நிறுவனங்கள் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை வழங்கி, கன்னட மொழியை பயன்படுத்தாமல் உள்ளனர். விதிமுறை மீறி செயல்படும் நிறுவனங்களின் உரிமம், முன் அறிவிப்பின்றி, ரத்து செய்யப்படும்.
புதிதாக உரிமம் வழங்கும் போதும், உரிமம் புதுப்பிக்கும் போதும், விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.