மர்ம உறுப்பில் 'எலக்ட்ரிக் ஷாக்' மிரட்டி பணம் பறித்த 7 பேர் கைது
மர்ம உறுப்பில் 'எலக்ட்ரிக் ஷாக்' மிரட்டி பணம் பறித்த 7 பேர் கைது
ADDED : மே 12, 2024 07:07 AM
கலபுரகி: இரண்டாம் தர வாகனங்களை வாங்கி விற்பவரை, அவரது நண்பர்களுடன் கடத்தி, மர்ம உறுப்பில் 'எலக்ட்ரிக் ஷாக்' கொடுத்த வழக்கில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலபுரகியை சேடம் தேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன். இவர், இரண்டாம் தர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்து வருகிறார். பெங்களூரில் கார்களை வாங்கி, கலபுரகியில் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த மே 4ம் தேதி, இவரை தொடர்பு கொண்ட இம்ரான் என்பவர், 'இரண்டாம் தர வாகனம் வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.
அர்ஜுனும், மே 5ம் தேதி, கலபுரகி நகர் ஹகரக குறுக்கு சாலைக்கு வரும்படி கூறியுள்ளார். இதனால், தனது நண்பர்கள் சம்ருதின், அப்துல் ரஹ்மானுடன் குறிப்பிட்ட இடத்துக்கு அர்ஜுன் சென்றுள்ளார்.
அங்கு இருந்த இம்ரான், அவரது நண்பர்கள் இம்ரான் பாட்டீல், ரமேஷ் ஆகியோர் காரில் ஏறி, 'டெஸ்ட் டிரைவ்' செய்வதாக கூறி, ஓட்டிச் சென்றனர்.
குறிப்பிட்ட இடத்துக்கு சென்ற பின், அங்கிருந்த ஒன்பது பேர், அர்ஜுன், அவரது நண்பர்கள் சம்ருதின், அப்துல் ரஹ்மானை வலுக்கட்டாயமாக காரிலிருந்து இறக்கி, அங்கிருந்த வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்களிடம் இருந்த பணத்தை பறித்தனர். அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏ.டி.எம்.,மில் எடுத்துக் கொண்டனர். இதன் பின், 'மேலும் பணம் வேண்டும்' என்று கேட்டனர். அதற்கு, அவர்கள், 'பணம் இல்லை' என்று கூறியுள்ளனர். மூவரின் ஆடைகளை கழற்றி, மர்ம உறுப்பில் 'எலக்ட்ரிக் ஷாக்' கொடுத்துள்ளனர்.
'இவ்விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது' என, மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
அதிர்ச்சியடைந்த பல்கலைக்கழக போலீஸ் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து, இம்ரான் பாட்டீல், முகமது மதின், ரமேஷ், முகமது ஜியா உல் ஹுசேன், முகமது அஜ்மல் ஷேக், ஹூசேன், சாகர் கோலி ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் வயது 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
தலைமறைவாக உள்ள ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.