" இது வெற்றி பயணம் " - சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி
" இது வெற்றி பயணம் " - சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி
UPDATED : செப் 15, 2024 06:13 AM
ADDED : செப் 14, 2024 09:05 AM

சென்னை: 'அமெரிக்க பயணத்தின் போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ரூ.7,618 கோடி முதலீடு பெறப்படுவதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்' என இன்று(செப்.14) முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றார்.சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரில் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 17 பயணத்தை முடித்து கொண்டு, நேற்று(செப்.,13) அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட முதல்வர் துபாய் வழியாக, இன்று(செப்.,14) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
11,516 பேருக்கு வேலை
பின்னர் நிருபர்கள் சந்திப்பில், ஸ்டாலின் கூறியதாவது: அமெரிக்கா அரசு முறை பயணம் வெற்றி பயணமாகவும், சாதனை பயணமாகவும் அமைந்தது. தனிப்பட்ட எனக்கான வெற்றி அல்ல, தமிழக மக்களுக்கான வெற்றி பயணம். அமெரிக்க பயணத்தின் போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது. ரூ.7,618 கோடி முதலீடு பெறப்பட்டதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்னும் பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.
உலகின் தலைசிறந்த 25 நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்தேன். திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பயன் அளிக்கும்.எங்களது பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் சென்னை வருகிறது போர்ட் நிறுவனம். புதிய கல்விக்கொள்கை, மெட்ரோ பணிகளுக்கான நிதி தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன். மதுவிலக்கு மாநாடு குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துவிட்டார்; அதற்கு மேல் நான் சொல்ல வேண்டியது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
இ.பி.எஸ்., க்கு பதில்
'கடந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என்பதை தெளிவாக கூறியுள்ளோம். இதனை இ.பி.எஸ்., படித்து பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். என்னென்ன முதலீடுகள் தி.மு.க., ஆட்சியில் வந்துள்ளன என்பதை விரிவாக கூறியுள்ளோம்.
இ.பி.எஸ்., முதல்வராக இருந்த போது வெளிநாடு சென்றதில் 10 சததவீதம் கூட தொழில் துவங்கவில்லை. என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை எல்லாம் சொன்னால் அவருக்கு அவமானமாக இருக்கும். முதலீடுகள் பற்றி விளக்கமாக தெரிவித்துள்ளேன். தொழில்துறை அமைச்சரும் விளக்கம் தந்துள்ளார்' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
ஜி.எஸ்.டி., வரி விகிதத்தில் உள்ள பிரச்னைகளை பன், ஜாம், க்ரீம் என்று பிரபல ஹோட்டல் உரிமையாளரான சீனிவாசன் பேசினார். இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்விக்கு, 'அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்து கொண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று' இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

