ரயில் நிலைய பார்க்கிங்கில் 6 வயது சிறுமி சடலம் மீட்பு
ரயில் நிலைய பார்க்கிங்கில் 6 வயது சிறுமி சடலம் மீட்பு
ADDED : ஜூலை 04, 2024 02:40 AM
பெங்களூரு: பெங்களூரு சிட்டி ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில், 6 வயது சிறுமி சடலமாக கிடந்தார். அவரை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்து கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையம் எதிரே, சிட்டி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று காலை ரயில் நிலையத்தின் முன் பக்க கேட் எதிரே, வாகன நிறுத்துமிடத்தில் உள்ள ஒரு மரத்தின் கீழ், 6 வயது சிறுமி இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணியர், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் உடலில் பல இடங்களில் காயம் இருந்ததால், அவரை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்து, உடலை வாகன நிறுத்தும் இடத்தில் போட்டு சென்று இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, அங்கு வந்த வாகனங்களை, கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.