ADDED : மே 10, 2024 10:49 PM
நெலமங்களா : பலத்த காற்றில் இரும்பு கேட் விழுந்ததில், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி உயிரிழந்தார்.
ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்காவைச் சேர்ந்தவர்கள் முக்கண்ணா - பாலம்மா தம்பதி. இவர்களின் மகள் எல்லம்மா, 7. வேலை நிமித்தமாக முக்கண்ணா, குடும்பத்தினருடன் பெங்களூரு நெலமங்களாவின் வஜரஹள்ளியில் வசிக்கிறார்.
பெங்களூரில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் எல்லம்மா விளையாடிக் கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதில் கேட் கழன்று சிறுமியின் மீது விழுந்தது. சிறுமி படுகாயமடைந்தாள்.
இதை பார்த்த தாய் பாலம்மா, மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.