மகளிர் இடஒதுக்கீடு விவகாரம் உளறி கொட்டிய வேட்பாளர்
மகளிர் இடஒதுக்கீடு விவகாரம் உளறி கொட்டிய வேட்பாளர்
ADDED : மே 08, 2024 04:46 AM

ஷிவமொகா : பெண்களுக்கான இடஒதுக்கீட்டை ராஜிவ் கொண்டு வந்ததாக ஷிவமொகா காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமார் பேசியது, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
லோக்சபா தேர்தலில் ஷிவமொகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கீதா போட்டியிடுகிறார். இவர் முன்னாள் முதல்வர் பங்காரப்பா மகள். கன்னட திரையுலக ஜாம்பவான் நடிகர் ராஜ்குமாரின் மருமகள். பிரதமர், பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து, இவர் தவறான தகவல்களை கூறியது, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் வாக்குறுதி என்பதை, ஆங்கிலத்தில் கூற முற்பட்டு, கீதா தடுமாறினார். அதன்பின் தன் சகோதரர் மது பங்காரப்பாவிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இதை கவனித்து பலரும் விமர்சித்தனர்.
மற்றொரு முறை இடத்தில் உரையாற்றும்போது அவர், '1992ல் ராஜிவ் பிரதமராக இருந்தபோது, பெண்களுக்கு சமமான உரிமை கிடைக்க வேண்டும் என, 33.3 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்.
அதற்கு முன்பு பெண்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கவில்லை. இட ஒதுக்கீடு இல்லை என்றால், பெண்கள் சட்டசபைக்கு வருவது எப்படி? இட ஒதுக்கீடு கிடைத்ததால், இந்திரா பிரதமரானார். ஜெயலலிதா, மாயாவதி உள்ளிட்ட தலைவியர் முதல்வராகினர்' என உளறிக் கொண்டினார்.
இவர் பேசிய அனைத்துமே தவறானது. லோக்சபா, சட்டசபைகளில் பெண்களுக்கு 33.3 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கொண்டு வந்தது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு. இதற்கு மாறாக இதை ராஜிவ் கொண்டு வந்தது என்றார் கீதா.
அத்துடன் 1991ல் ராஜிவ் கொல்லப்பட்டு விட்டார். இந்திராவோ 1984லேயே கொல்லப்பட்டார். உயிரோடு இல்லாத ராஜிவ், 1992ல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்ட வந்து, அதன் பலனாக இந்திரா பிரதமரானார் என, கீதா கூறியதை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இவர் தேர்தலில் வென்று பார்லிமென்ட் சென்றால், என்ன ஆகுமோ என்று தலையிலடித்துக் கொள்கின்றனர்.

