நாளிதழில் விளம்பரம் கொடுத்து ஆத்மாவுக்கு வரன் தேடும் குடும்பம்
நாளிதழில் விளம்பரம் கொடுத்து ஆத்மாவுக்கு வரன் தேடும் குடும்பம்
ADDED : மே 13, 2024 09:39 PM
மங்களூரு: தட்சிண கன்னடா, புத்துாரில் வசிக்கும் குடும்பத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை, ஒரு மாதத்தில் இறந்துவிட்டது. சமீப நாட்களாக இவர்களின் வீட்டில் அசம்பாவிதங்கள் நடந்தன.
இதை பற்றி பலரிடம் கேட்டபோது, '30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பெண் குழந்தை, ஆத்மாவாக அலைகிறது. அதற்கு திருமணம் செய்து வைத்தால் பிரச்னைகள் சரியாகும்' என, ஆலோசனை கூறியுள்ளனர்.
எனவே ஆத்மாவுக்கு திருமணம் செய்து வைக்க, அதே போன்று வரனை தேடினர். எங்கும் கிடைக்காததால், நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர். '30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பெண்ணுக்கு, அதே ஆண்டு இறந்த ஆண் வரன் தேவை.
ஆத்மா திருமணத்தில் விருப்பம் உள்ளவர்கள், தொடர்பு கொள்ளவும்' என, விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.
விளம்பரம் கொடுத்த பின், 50க்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டு, பேச்சு நடத்துகின்றனர். 'விரைவில் வரன் முடிவாகி திருமணம் நடக்கும்' என, குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆத்மாக்களுக்கு திருமணம் செய்வது, கடலோர மாவட்டத்தில் புதிய விஷயம் அல்ல. ஆனால் விளம்பரம் அளித்திருப்பது புதிது. இங்குள்ள மக்களின் நம்பிக்கைபடி, பெண்ணோ அல்லது ஆணோ திருமணம் ஆகாமல் இறந்தால், அவர்களுக்கு நற்கதி கிடைக்காது. ஆத்மாவாக அலைவார்களாம்.
எனவே ஆண் ஆத்மா, பெண் ஆத்மாக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் உள்ளது.
உயிரோடு உள்ள மணமக்களுக்கு, எப்படி திருமணம் நடக்கிறதோ, அதே போன்று ஆத்மாக்களுக்கும் சாஸ்திர, சம்பிரதாயப்படி திருமணங்கள் நடத்துகின்றனர்.
விருந்தினர்களுக்கு பலமான விருந்தும், ஏற்பாடு செய்கின்றனர். இத்தகைய திருமணங்கள், கன்னட ஆஷாடா மாதம், இரவு நேரத்தில் திருமணம் நடத்துவது சம்பிரதாயம்.
விளம்பரத்தை பார்த்த பலரும், 'இந்த விஞ்ஞான காலத்திலும் கூட, மக்கள் மூட நம்பிக்கையில் வாழ்கின்றனர்' என, கருத்துத் தெரிவித்துள்ளனர்.

