ADDED : ஜூன் 26, 2024 08:52 AM
பெங்களூரு : சூடான தோசை கேட்டும் கொடுக்காமல், வாடிக்கையாளரை திட்டிய ஹோட்டலுக்கு, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், 7,000 ரூபாய் அபராதம் விதித்தது.
பெங்களூரு கோரமங்களாவை சேர்ந்தவர் தஹாரா, 56. தனது குடும்பத்துடன் ஹாசனுக்கு 2022 ஜூலை 30ம் தேதி சுற்றுலா புறப்பட்டனர். பெங்களூரு புறநகர் பகுதிக்கு சென்ற போது, தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள 'உடுப்பி கார்டன் ரெஸ்டாரென்டில்' உணவருந்த சென்றனர்.
தஹாரா, தனக்கு தோசை வேண்டும் என்று கேட்டுள்ளார். ஹோட்டல் ஊழியர், ஏற்கனவே போட்டு வைத்திருந்த தோசையை கொண்டு வந்து கொடுத்துள்ளார். தனக்கு சூடான தோசை வேண்டும் என்று பலமுறை கேட்டும் ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை.
உணவு சாப்பிடாமல், ஆர்டர் செய்த உணவுக்கு கட்டணம் செலுத்தி, பில் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதனால் அப்பெண்ணுக்கு குறைந்த ரத்த அழுத்தம், நீரிழிவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் நாள் முழுதும் சிகிச்சை பெற்றதுடன், சுற்றுலாவும் செல்லவில்லை.
தனக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட காரணமான ஹோட்டல் மீது, முதல் கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். அத்துடன், ஹோட்டலில் தனது குடும்பத்தினர் சாப்பிட்டதற்கான பில் உட்பட மற்ற ஆதாரங்களை சமர்ப்பித்தார். புகாரை பெற்று கொண்ட ஆணைய குழுவினர், ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில், தோசையை பிடித்து கொண்டு பாதிக்கப்பட்ட பெண், ஊழியர்களிடம் முறையிடுவதும், ஊழியர்கள் அவரை திட்டுவதும் அதில் பதிவாகி இருந்தது. இதன் அறிக்கையை, ஆணையத்தில் அதிகாரிகள் சமர்ப்பித்தனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், உடுப்பி கார்டன் ஹோட்டலுக்கு, 5,000 ரூபாய் அபராதமும், பெண்ணின் வழக்கு செலவாக, 2,000 ரூபாயும் என 7,000 ரூபாய் அபராதம் வசூலிக்க உத்தரவிட்டது.