ADDED : ஜூலை 24, 2024 11:59 PM
கிரிநகர், : புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நண்பனின் மனைவிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற, பைக் திருட்டில் ஈடுபட்ட ஆந்திரா பழ வியாபாரி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு கிரிநகர் போலீசார், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பைக் திருட்டில் ஈடுபட்ட, ஆந்திராவை சேர்ந்த பழ வியாபாரி அசோக், 42, மாண்டியாவை சேர்ந்த சதீஷ், 40 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 8 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அசோக்கின் நெருங்கிய நண்பரின் மனைவிக்கு மார்பக புற்றுநோய் உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக பல லட்சம் ரூபாய் செலவாகும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால், அசோக்கின் நண்பரிடம் பணம் இல்லாததால் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இதுபற்றி அறிந்த அசோக், நண்பனின் மனைவியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்காக திருட்டில் ஈடுபட முடிவு செய்தார். அவருக்கு ஏற்கனவே திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சதீஷின் பழக்கம் இருந்தது. இதனால் இருவரும் சேர்ந்து பைக் திருடியது தெரிந்துள்ளது.