ADDED : ஜூன் 18, 2024 06:33 AM

உடுப்பி: குந்தாபுராவில் கமலாஷிலே பிராமி துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான கோ சாலையில், பசுக்கள் திருடும் முயற்சி தடுக்கப்பட்டது.
உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில், பிரசித்தி பெற்ற கமலாஷிலே பிராமி துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, அருகிலேயே கோ சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 15ம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு, கோ சாலைக்குள் நுழைந்த மர்ம நபர்கள், மூன்று பசுக்களின் கயிற்றை அவிழ்த்து, பசுக்களை திருடி செல்ல முயற்சித்தனர்.
அங்கடகட்டே குந்தாபுராவில் கோவில் நிர்வாகம் சார்பில், அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மைய ஊழியர்கள், இதை கவனித்து உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசாரும் அங்கு சென்றனர்.
இதை பார்த்த மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பியோடி விட்டனர். ஊழியர்களின் முயற்சியால், பசுக்கள் திருடுவது தடுக்கப்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. குந்தாபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.