ADDED : மே 03, 2024 06:52 AM

ராய்ச்சூர்: ''பிரதமர் நரேந்திர மோடியை, நான் எதிர்க்கவில்லை. ஆனால் நாட்டின் நலனுக்கு பா.ஜ., தகுதியான கட்சியல்ல,'' என காங்கிரஸ் தலைவர் தேஜஸ்வினி கவுடா தெரிவித்தார்.
ராய்ச்சூரில் நேற்று அவர் கூறியதாவது:
அண்ணாமலை எந்த சீமையின் தலைவர். கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றிய இவர், மேகதாது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இத்தகையவரை கர்நாடக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளியாக்கியது. குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். கர்நாடகாவின் முக்கியமான திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுபவரின் வழிகாட்டுதல் பெறும் சூழ்நிலைக்கு, பா.ஜ., வந்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாத அண்ணாமலையை, கர்நாடகா தேர்தல் பொறுப்பாளியாக்கும் அவலநிலை பா.ஜ.,வுக்கு ஏற்பட்டு உள்ளது.
மக்கள் தலைவர்கள், மக்களிடம் இருந்து உருவாவர்.
அண்ணாமலை கர்நாடகாவில் அதிகாரியாக பணியாற்றியவர். இப்போது தமிழகத்துக்கு சென்று, கன்னடம் தெரியாது, அது தெரியாது, இது தெரியாது என்கிறார்.
மக்கள் முட்டாள்கள் அல்ல. தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பர்.
பிரதமர் நரேந்திர மோடியை, நான் எதிர்க்கவில்லை.
விமர்சிக்கவில்லை. ஆனால் நாட்டின் நலனுக்கு பா.ஜ., தகுதியான கட்சியல்ல என்பது என் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.